தங்கவயலுக்கு கிருஷ்ணா நீர் ம.ஜ.த., - எம்.பி., நம்பிக்கை
தங்கவயலுக்கு கிருஷ்ணா நீர் ம.ஜ.த., - எம்.பி., நம்பிக்கை
ADDED : மே 11, 2026 02:35 AM
கோலார்: ''தங்கவயல் நகரின் குடிநீர் பிரச்னையை தீர்க்க, கிருஷ்ணா நதி நீர் கிடைக்க முயற்சித்து வருகிறேன்,'' என, கோலார் ம.ஜ.த., எம்.பி., மல்லேஸ் பாபு தெரிவித்தார்.
கோலாரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தங்கவயலில் மூடிக்கிடக்கும் அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தை திறந்து சீரமைக்க வேண்டும் என, தங்கச் சுரங்க நிர்வாக அதிகாரிகளை வலியுறுத்தி உள்ளேன். இதற்கான, டெண்டர் விரைவில் கோரப்படும்.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தங்கச் சுரங்க நிறுவன நிலங்களை மீட்க, அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
தங்கச் சுரங்கம் முன்னாள் தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வரும் வீடுகள் பிரச்னை தீர்க்கவும், சுரங்க தொழிலாளர் நிலுவைத் தொகை பிரச்னைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
தங்கவயலில் ரயில் பெட்டி தொழிற்சாலை அமைக்க, தங்கச் சுரங்க நிறுவன அதிகாரிகள், நிலம் வழங்க முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றனர். நிலம் கிடைத்தால் ரயில் பெட்டி தொழிற்சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.
சீனிவாசப்பூரில் ரயில் பெட்டி தொழிற்சாலை அமையாததற்கு நிலம் கையகப் படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து மாநில முதல்வரை சந்தித்து பேசுவேன்.
கிருஷ்ணா நதி நீர் தங்கவயலுக்கும் கிடைத்தால் தான், குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். விரைவில் நிறைவேறும் நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
