கே.ஆர்.எஸ்., அணை முற்றுகை போராட்டம்; எதிர்க்கட்சி தலைவர் அசோக் அறிவிப்பு
கே.ஆர்.எஸ்., அணை முற்றுகை போராட்டம்; எதிர்க்கட்சி தலைவர் அசோக் அறிவிப்பு
ADDED : ஜூலை 18, 2026 12:03 AM

மாண்டியா: ''மூன்று நாட்களுக்குள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்காவிட்டால், கே.ஆர்.எஸ்., அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்,'' என்று, எதிர்க்கட்சி தலைவர் அசோக் அறிவித்துள்ளார்.
மாண்டியாவின் மலவள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில், தண்ணீர் கிடைக்காமல் காய்ந்து போன கரும்பு பயிர்களை, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் நேற்று முன்தினம் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
காவிரி நீர் விநியோகம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை, கர்நாடக அரசு உடனே கூட்ட வேண்டும். நீர் விநியோக விவகாரத்தில் தமிழகம் தனது நற்பெயரை இழந்து விட்டது. நீர் திறக்க கோரி தமிழகம் நீதிமன்றத்தை நாடும். இதை எப்படி எதிர்த்து போராடுவது என கர்நாடக அரசு முடிவு செய்ய வேண்டும்.
கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால், விவசாய பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்காவிட்டால், பா.ஜ., சார்பில் அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு அறிவிக்க வேண்டும்.
மாநிலத்தில் நிலவும் வறட்சி குறித்து விவாதிக்க, சிறப்பு சட்டசபை கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும். மக்கள் பிரச்னை குறித்து கவலை இல்லாமல், எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர் பதவியை பிடிக்க நினைக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
