ADDED : ஜூலை 14, 2026 04:04 AM

உத்தர கன்னடா: கோவாவில் இருந்து சட்டவிரோதமாக மதுபானத்தை கடத்தி வந்த மாவட்ட ஆயுதப்படை ஏட்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
உத்தரகன்னடா மாவட்ட ஆயுதப்படை ஏட்டு சந்தோஷ் லமானி. இவர், 2024 ஜூனில் கோவாவில் இருந்து உத்தரகன்னடாவின் கோகர்ணாவின் ஓம் பீச்சுக்கு, வாகனத்தில் மதுபானங்களை கடத்தி வந்தார்.
சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சித்தார். உயிர் தப்பிய போலீசார், சந்தோஷ் லமானியின் வாகனத்தை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர், ஆயுதப்படை ஏட்டு என்பதை அறிந்த போலீசார், அவரை கைது செய்தனர். அதை தொடர்ந்து பணியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
அவர் மீது துறை ரீதியாக விசாரணை நடத்த, கார்வார் ஊரக போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பேக்டர் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர், எஸ்.பி.தீபனிடம் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தனர்.
அதில், 'சட்ட விரோதமாக மதுபானம் கடத்தியது, கடமையில் அலட்சியம் செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன' என்று குறிப்பிட்டிருந்தது.
இதையடுத்து அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
