ADDED : ஜூலை 30, 2026 11:07 PM

ஷிவமொக்கா: முதல்வர் சிவகுமாரின் தனி செயலர் என கூறி, பொழுதுபோக்கு கிளப்புக்கு லைசென்ஸ் பெற்றுத் தருவதாக கூறி, 15 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றியவர், கைது செய்யப்பட்டார்.
ஷிவமொக்கா நகரின், துங்கா நகரில் வசிப்பவர் மஞ்சுநாத் ஹன்சி, 35. இவருக்கு சில மாதங்களுக்கு முன், ஹேமந்த்குமார், 30, என்பவர் அறிமுகமானார். இவர் தன்னை முதல்வர் சிவகுமாரின் தனிச் செயலர் என, கூறிக்கொண்டார். 'வாரத்தில் நான்கைந்து நாட்கள் பெங்களூரில் இருப்பேன். இரண்டு நாட்கள் ஷிவமொக்காவில் இருப்பேன்' என்றும் கூறினார்.
இவர் சொல்வது உண்மை என, மஞ்சுநாத் நம்பினார்.
இதற்கிடையே, பொழுதுபோக்கு கிளப் துவக்க, 15 லட்சம் ரூபாய் செலவாகும் என்றார். இதை நம்பிய மஞ்சுநாத், 15 லட்சம் ரூபாயை அவரிடம் கொடுத்தார். பணம் வாங்கி பல மாதங்களாகியும், கிளப் திறப்பதற்கான வேலையை அவர் துவக்கவில்லை. லைசென்சும் பெறவில்லை.
இதை பற்றி கேட்டால், மழுப்பலாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த மஞ்சுநாத், ஷிவமொக்கா நகர் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தார். போலீசாரும், வழக்கு பதிவு செய்து, ஹேமந்த் குமாரை நேற்று கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.
