பிள்ளைகளின் கல்வி செலவுக்காக பைக்குகளை திருடியவர் கைது
பிள்ளைகளின் கல்வி செலவுக்காக பைக்குகளை திருடியவர் கைது
ADDED : ஜூன் 25, 2026 10:40 PM

தேவனஹள்ளி: பிள்ளைகளின் கல்விக்காக, பைக் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து, 42 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெங்களூரு ரூரல் மாவட்டம், தேவனஹள்ளி தாலுகாவின், விஜயபுரா போலீசார் பைக் திருட்டு வழக்கில், பறிமுதல் செய்த பைக்குகள், நேற்று உரியவர்களிடம் சேர்க்கப்பட்டன.
பின், எஸ்.பி., சந்திரகாந்த் அளித்த பேட்டி:
விஜயபுரா பஸ் நிலையத்தின், பட்டு கூடு மார்க்கெட் எதிரே, கிருஷ்ணா என்பவர், ஜூன் 16ம் தேதியன்று, பைக்கை நிறுத்திவிட்டு எலஹங்காவுக்கு சென்றிருந்தார். மாலை திரும்பி வந்து பார்த்த போது, பைக் திருட்டு போயிருந்தது. இது குறித்து, விஜயபுரா போலீஸ் நிலையத்தில், அவர் புகார் அளித்தார்.
அதன் பின், குற்றவாளியை கண்டுபிடிக்க, சிறப்பு படை அமைக்கப்பட்டது. படையினர் பல கோணங்களில் விசாரணை நடத்தி, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, விஜயபுராவின், இஸ்லாம் நகரில் வசிக்கும் கலீல் அகமது, 46, என்பவரை கைது செய்தனர்.
இவரிடம் விசாரித்த போது, ஹொஸ்கோட், நந்தகுடி, சூலிபெலே உட்பட, பல்வேறு இடங்களில், பைக்குகள் திருடியதை ஒப்புக்கொண்டார்.
இவரிடம் இருந்து, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 42 பைக்குகள் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் சேர்க்கப்பட்டன. கலீல் அகமதுவுக்கு திருமணமாகி, மூன்று குழந்தைகள் உள்ளன.
பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியில் உள்ள இவருக்கு அதில் கிடைத்த வருவாய், பிள்ளைகளின் கல்வி மற்றும் குடும்ப செலவுக்கு போதுமானதாக இல்லை.
வீட்டில் வறுமை ஏற்பட்டது. பிள்ளைகளின் கல்வி, குடும்ப தேவைக்கு எளிதில் பணம் சம்பாதிக்கும் நோக்கில், பைக் திருட்டில் ஈடுபட்டார். திருடிய sபைக்குகளை, வெறும், 2,000 முதல், 2,500 ரூபாய்க்கு விற்றதை ஒப்புக்கொண்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
