/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மனைவியின் கள்ளக்காதலனை கல்லை போட்டு கொன்றவர் கைது
/
மனைவியின் கள்ளக்காதலனை கல்லை போட்டு கொன்றவர் கைது
ADDED : ஏப் 11, 2025 11:15 PM

தாவணகெரே:மனைவியின் கள்ளக்காதலன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார். சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்தில், கொலையாளியை மோப்ப நாய் தாரா கண்டுபிடித்தது.
தாவணகெரே நகரின் ஹொன்னுார் கொல்லரஹட்டி கிராமத்தில் வசிப்பவர் ஜெயப்பா, 30. இவருக்கு சில மாதங்களுக்கு முன், பரிமளா, 25, என்பவருடன் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு முன், பரிமளா சித்ரதுர்காவின் ஹெகடேஹாள் கிராமத்தின் சிவகுமார், 28, என்பவரை காதலித்து உள்ளார். திருமணத்துக்கு பின்னரும், இவர்களின் காதல் நீடித்தது.
சிவகுமார் அவ்வப்போது, ஹொன்னுார் கொல்லரஹட்டி கிராமத்துக்கு வந்து, பரிமளாவை சந்திப்பார். இருவரும் ரகசியமாக உல்லாசமாக இருந்தனர். இது கணவர் ஜெயப்பாவுக்கு அரசல், புரசலாக தெரிந்தது. அவர் மனைவியை கண்டித்தார்.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன், வழக்கம் போன்று காதலியை பார்க்க கொல்லரஹட்டி கிராமத்துக்கு சிவகுமார் வந்தார்.
வயலில் இருவரும் நெருக்கமாக இருந்தனர். இதை நேரில் பார்த்த ஜெயப்பா கோபம் அடைந்தார்; சிவகுமாரை தாக்கினார். அவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
அவரை விரட்டி சென்று, அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த ஜெயப்பா அங்கிருந்து வீட்டுக்கு சென்றுவிட்டார். நடந்த சம்பவம் பற்றி யாரிடமும் கூறவில்லை.
வயலில் ஒருவர் கொலையாகி கிடப்பதை பார்த்த சிலர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த தாவணகெரே ஊரக போலீசார், உடலை மீட்டனர். தடயங்களை கண்டுபிடிக்க குற்றப்பிரிவு மோப்ப நாயான 'தாரா'வை அழைத்து வந்தனர். தாரா அங்கும், இங்கும் சுற்றி நேராக ஜெயப்பாவின் வீட்டு வாசலுக்கு சென்று நின்றது.
ஜெயப்பாவிடம் போலீசார் விசாரித்த போது, நடந்த சம்பவத்தை விவரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்தில், கொலையாளியை கண்டுபிடித்த தாராவை பலரும் பாராட்டினர்.