/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோடையை எதிர்கொள்ள 'மினி குடிநீர் டேங்கர்கள்'
/
கோடையை எதிர்கொள்ள 'மினி குடிநீர் டேங்கர்கள்'
ADDED : பிப் 11, 2026 05:29 AM

பெங்களூரு: ''கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில், 'மினி டேங்குகள்' நிறுவ வேண்டும்,'' என்று அதிகாரிகளுக்கு, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் உத்தரவிட்டு உள்ளார்.
கோடை காலம் துவங்க உள்ளதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் தடுப்பது குறித்து, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் அலுவலகத்தில் அதன் தலைவர் ராம்பிரசாத் மனோகர், அதிகாரிகளுடன் நேற்று முன்னேற்பாடு கூட்டம் நடத்தினார்.
கூட்டத்துக்கு பின் அவர் பேசியதாவது:
குடிநீர் நெருக்கடி ஏற்படக்கூடிய இடங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை குறைக்கவும், இலவசமாக குடிநீர் வினியோகிக்கவும் 'மினி குடிநீர் டேங்கர்கள்' நிறுவ முடிவு செய்யப்பட்டு உள்ளது.
குடிநீர் வாரிய டேங்கர்களுக்கும், 'சஞ்சாரி காவேரி' நடமாடும் டேங்கர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலை இருந்தால் மட்டுமே, தனியார் குடிநீர் டேங்கர்களை வாடகைக்கு எடுக்க வேண்டும்.
கோடையை சமாளிப்பதில் எந்தவித அலட்சியமும் ஏற்படக்கூடாது. எனவே, அனைத்து தலைமை பொறியாளர்கள், உதவி நிர்வாக பொறியாளர்கள், நீர் ஆய்வாளர்கள், தங்கள் அலுவலகங்களில் அமர்ந்திருக்காமல், நேரடியாக நிலைமையை நிர்வகிக்க களத்தில் இறங்க வேண்டும்.
அதிகாரிகள் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட இடங்களுக்கு தினமும் சென்று நிலவரத்தை கண்காணிக்க வேண்டும். அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

