குமாரசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கன்ட்ரே மறுப்பு
குமாரசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கன்ட்ரே மறுப்பு
ADDED : ஜூலை 07, 2026 09:25 PM

பெங்களூரு: ஹெச்.எம்.டி., நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளதாக மத்திய அமைச்சர் குமாரசாமி கூறிய புகாருக்கு, அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே மறுப்பு தெரிவித்து உள்ளார்.
பெங்களூரு ஜாலஹள்ளியில் உள்ள வனப்பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான ஹெச்.எம்.டி., நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, காங்கிரஸ் அரசு ரியல் எஸ்டேட் செய்வதாக மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி குற்றஞ்சாட்டினார்.
இதற்கு பதிலளித்து, கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கூறியதாவது:
ஹெச்.எம்.டி., நிறுவனம் வன நிலத்தை சட்டவிரோதமாக வணிக நோக்கங்களுக்கு பயன்படுத்துகிறது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் திரைப்படங்கள் மற்றும் சீரியல் ஷூட்டிங் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. இது வனத்தை நாசமாக்கும் முயற்சியாகும்.
மேலும், 165 ஏக்கர் வன நிலத்தை, ஹெச்.எம்.டி., நிறுவனம், 300 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து உள்ளது. இந்த நிறுவனத்தின் வசமுள்ள நிலத்தின் மொத்த மதிப்பு 14,000 கோடி ரூபாய். இதன் மீது சிலர் கண் வைத்து உள்ளனர்.
ஹெச்.எம்.டி., வசம் உள்ள நிலம் 7 கோடி கன்னடர்களுக்கு சொந்தமானது. இங்கு 444 ஏக்கரில் லால்பாக், கப்பன் பூங்காவை விட பெரிய உயிரியல் பூங்கா உருவாக்கப்பட உள்ளது.
அங்கீகரிப்பட்ட வனப்பகுதியில் ரியல் எஸ்டேட் பணிகள் நடத்துவது சாத்தியமற்றது. எனவே, மத்திய அமைச்சர் குமாரசாமியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை.
மாநிலத்தின் வளர்ச்சி மீது குமாரசாமிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், ஏதாவது ஒரு பின் தங்கிய மாவட்டத்தில் புதிதாக தொழிற்சாலையை அமைத்து அங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
