பணிக்கு வராத அரசு ஊழியர்களை நீக்க அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா உறுதி
பணிக்கு வராத அரசு ஊழியர்களை நீக்க அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா உறுதி
ADDED : செப் 05, 2026 11:14 PM

பெங்களூரு: ''பணிக்கு முறையாக வராத அரசு ஊழியர்கள், உடனடியாக பணியில் இருந்து நீக்க வேண்டும்,'' என, பெங்களூரு நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா உத்தரவிட்டார்.
பெங்களூரு விதான் சவுதாவில், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுடன் நேற்று அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
ஜி.பி.ஏ., நடைமுறைக்கு வந்த பின், புதிய அமைப்புக்கான முறையான செயல்முறை வகுக்கப்பட்டு வருகிறது. 30 சதவீத அரசு ஊழியர்கள், தாங்கள் பணியமர்த்தப்பட்ட இடங்களில் தங்களது பணிகளை முறையாக செய்வதில்லை.
பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு மூன்று முறை 'நோட்டீஸ்' வழங்கப்படும். விதிகள்படி அவர்களை பணியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மாநகராட்சி துாய்மை ஊழியர்களின் முதன்மையான கடமை, வீடு வீடாக சென்று குப்பையை சேகரிக்க வேண்டும். குப்பையை சேகரிக்கவில்லை என்றால், மக்கள் சாலையில் தான் குப்பையை வீசுவர்.
இது, தேவையற்ற குப்பை குவியல்களை உருவாக்குகிறது. 30 சதவீத மாநகராட்சி பணியாளர்கள், தினம் பணிக்கு வராவிட்டால், நகரை எப்படி துாய்மையாக வைத்திருக்க முடியும்...
பயன்படுத்தாமல் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற, ஒப்பந்தார்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். உள்ளூர் பிரதிநிதிகள் இப்பணியை கண்காணித்து, பிரச்னைகளை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். மேலும், தனியார் கழிவுகள் அகற்றுதல், துாய்மை பணிகளை கண்காணித்து, அகற்றும் பணியிலும் இணைய வேண்டும்.
பொது மக்கள் சாலைகளில் கழிவுகளை வீசுவதை நிறுத்த வேண்டும். சாலையோரத்தில் குப்பை தொட்டிகள் வைக்கும் பழக்கம் தொடரக்கூடாது. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கழிவு சேகரிப்பு வாகனம் அனுப்பப்படும். பொது மக்கள் தங்கள் வீட்டு கழிவுகளை, அந்த வாகனத்தில் கட்டாயமாக ஒப்படைக்க வேண்டும். சாலை ஓரத்தில் கழிவுகளை வீசக்கூடாது.
குறிப்பிட்ட நேரத்தில் கழிவுகளை வழங்க இயலாத பட்சத்தில், அவர்கள் தங்கள் வீட்டின் வளாகத்திலோ அல்லது கிரில்லிலோ கழிவு பையை தொங்கவிடலாம். கழிவு சேகரிப்பு பணியாளர்கள் அங்கிருந்து அவற்றை எடுத்து செல்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.
