துறை மாறினாலும் துரத்தும் துரதிர்ஷ்டம் அமைச்சர் ராமலிங்க ரெட்டி 'அப்செட்'
துறை மாறினாலும் துரத்தும் துரதிர்ஷ்டம் அமைச்சர் ராமலிங்க ரெட்டி 'அப்செட்'
ADDED : செப் 01, 2026 08:05 PM

- நமது நிருபர் -: க ர்நாடக முதல்வராக சிவகுமார், கடந்த ஜூன் 3ம் தேதி பதவியேற்றார். இவருடன், 12 அமைச்சர்களும் பதவியேற்றனர். இவர்களில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராமலிங்க ரெட்டியும் உண்டு. இவர், தொடர்ந்து எட்டாவது முறையாக எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
தனக்கு பெங்களூரு நகர வளர்ச்சி துறையை ஒதுக்கும்படி சிவகுமாரிடம் கேட்டார். ஆனால், இவருக்கு நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த அவர், தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாக தெரிவித்தார். சிவகுமார் தன்னை ஏமாற்றிவிட்டதாக செய்தியாளர்கள் முன்னிலையில் கொதிப்படைந்தார்.
போராட்டம் இதையடுத்து, அவரை கட்சியின் மூத்த தலைவர்கள் சமாதானப்படுத்தினர். 'கொஞ்ச நாட்களுக்கு நீர்வளத்துறை அமைச்சராக இருங்கள்; பின், வேறு துறை தருகிறோம்' என்றனர்.
இதனால், அவரும் அமைதியாக இருந்தார். அவரது கெட்ட நேரம், காவிரி நதிநீர் பகிர்வு விவகாரம் பூதாகரமாக வெடித்தது. தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்துவிடக் கோரி, காவிரி நீர் ஒழுங்கு முறை வாரியம் உத்தரவிட்டது. இதற்கு, கர்நாடக விவசாயிகள், கன்னட அமைப்பினர், எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் நடத்தினர்.
நீரை திறந்துவிட்டால் விவசாயிகளிடம் இருந்து வரும் எதிர்ப்பு; நீரை திறக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு என இக்கட்டான சூழலில் ராமலிங்கரெட்டி மாட்டிக்கொண்டார். இந்த விவகாரத்தால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு, அவசரக் கூட்டங்கள் என நிம்மதியை இழந்தார்.
இதனால், 'பெங்களூரு நகர வளர்ச்சி துறை கூட வேண்டாம்; வேறு ஏதேனும் ஒரு துறையை சீக்கிரமாக தாருங்கள்' என மேலிடத்தை நச்சரித்தார். இதன் படி, கடந்த மாதம் 12ம் தேதி ராமலிங்க ரெட்டிக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டது. இது, அவருக்கு நிம்மதியை தந்தது. இந்த நிம்மதி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
பதவியேற்ற மூன்றே நாட்களில், சாம்ராஜ் நகரில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பெரும் தலைவலி இந்த விவகாரம், கர்நாடக மற்றும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு, தமிழக முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்தார்.
பா.ஜ., - ம.ஜ.த.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சியினர், சட்டசபையில் ராமலிங்க ரெட்டியை வெளுத்து வாங்கினர்.
ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் அசோக் வலியுறுத்தினார். இது, அவருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது.
இந்நிலையில், வால்மீகி ஆணைய முறைகேட்டில் தொடர்புடைய நாகேந்திராவின் பக்கம், எதிர்க்கட்சியினரின் கவனம் திசை திரும்பியதால், ரெட்டிக்கு தற்காலிக நிம்மதி கிடைத்தது.
இந்த நிம்மதி நீடிக்க வேண்டும் என்பதாலும், மீண்டும் பிரச்னைகளில் சிக்கக்கூடாது என்பதற்காக தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் ஜோதிடர்களை அணுகி, பரிகார பூஜைகள் செய்வது குறித்து அவர் ஆலோசிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
