போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை அதிகாரிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை
போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை அதிகாரிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை
ADDED : செப் 13, 2026 11:12 PM

தார்வாட்: ''எந்த மாவட்டத்திலாவது, போலி டாக்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அதற்கு மாவட்ட சுகாதார அதிகாரி, தாலுகா சுகாதார அதிகாரிகளை பொறுப்பாளியாக்கி, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் காதர் எச்சரித்தார்.
தார்வாடில் நேற்று அவர் அளித்த பேட்டி:
உணவில் கலப்படம் நடப்பதை தடுக்க, அனைத்து கட்டங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது. ஹோட்டல்களில் பொதுமக்களுக்கு, அநியாயம் நடக்க கூடாது. சுகாதாரம், துாய்மை இல்லாவிட்டால் மக்கள் புகார் அளிக்க, கியூ.ஆர்., கோடு வசதி கொண்டு வரப்பட்டது.
மக்களின் நலனை கருதி, பான் மசாலா, நிகோடின் கலந்த குட்காவுக்கு, அரசு தடை விதித்துள்ளது. ஆரோக்கியத்துக்கு அபாயத்தை ஏற்படுத்தும் பொருட்களை, மக்கள் ஒதுக்கி தள்ள வேண்டும்.
மாநிலத்தில் போலி டாக்டர்கள் அதிகரிப்பது, வருந்தத்தக்க விஷயமாகும். எந்த இடத்திலாவது போலி டாக்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதார அதிகாரிகள், தாலுகா சுகாதார அதிகாரிகளை பொறுப்பாளியாக்கி, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து, விரைவில் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கதக்கில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடக காங்கிரசை அரசியல்ரீதியாக குறிவைக்க நிறைய முயற்சிகள் நடக்கின்றன. ஆனாலும், எங்கள் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளனர். எங்களுக்குள் எந்த உட்கட்சி பூசலும் இல்லை.
சித்தராமையா, சிவ குமார், சதீஷ் ஜார்கிஹோளி, பரமேஸ்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஒன்றிணைந்து கட்சியை வழிநடத்துகின்றனர்.
எஸ்.டி., சமூகத்தின் பிரபல தலைவர் என்பதால் சதீஷ் ஜார்கிஹோளியை, அரசியல்ரீதியாக முடக்க பா.ஜ., முயற்சி செய்கிறது. சதீஷுடன் கட்சி எப்போதும் துணை நிற்கும். அவரை பற்றி எவ்வளவு பொய் பிரசாரம் செய்தாலும், எஸ்.டி., சமூக மக்களிடம் எடுபடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
