/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வழக்கில் சிக்கியதால் விழி பிதுங்கி நிற்கும் எம்.எல்.ஏ.,க்கள்
/
வழக்கில் சிக்கியதால் விழி பிதுங்கி நிற்கும் எம்.எல்.ஏ.,க்கள்
வழக்கில் சிக்கியதால் விழி பிதுங்கி நிற்கும் எம்.எல்.ஏ.,க்கள்
வழக்கில் சிக்கியதால் விழி பிதுங்கி நிற்கும் எம்.எல்.ஏ.,க்கள்
ADDED : பிப் 25, 2026 07:29 AM

கடந்த, 2023 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்களில் பலர், ஏதாவது ஒரு வகையில் சட்டத்தின் பிடியில் சிக்கினர். ஊழல் குற்றச்சாட்டிலும் சிக்கியுள்ளனர். அவர்களின் விபரம்:
நஞ்சே கவுடா: கோலார் மாவட்டம் மாலுார் சட்டசபை தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இவர். தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை சட்டப்படி நடக்கவில்லை. முறைகேடு நடந்துள்ளதாக, அதே தொகுதியில் களமிறங்கி தோற்ற பா.ஜ., வேட்பாளர் மஞ்சுநாத் கவுடா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்; தேவையான ஆவணங்களும் தாக்கல் செய்தார்.
விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானதால், நஞ்சேகவுடாவின் எம்.எல்.ஏ., பதவியை ரத்து செய்து, 2025 செப்டம்பரில் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமமூர்த்தி: கடந்த 2023 சட்டசபை தேர்தலில், பெங்களூரின் ஜெயநகர் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட ராமமூர்த்தி, குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரசின் சவும்யா ரெட்டி, இந்த வெற்றியை ஒப்புக்கொள்ளவில்லை. 827 தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளது. எனவே, மறு ஓட்டு எண்ணிக்கை நடத்தும்படி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சவும்யா ரெட்டி மனுத்தாக்கல் செய்துள்ளார். இப்போது தான் வழக்கின் விசாரணை துவங்கியுள்ளது.
சதீஷ் சைல்: உத்தரகன்னடா மாவட்டத்தின் கார்வார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷ் சைர். இவர் மீது ஆயிரக்கணக்கான மெட்ரிக் டன் இரும்புத்தாது திருடி, சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்த வழக்கு உள்ளது. இதனால், அரசு கருவூலத்துக்கு, 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால், ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 44 கோடி ரூபாய் அபராதம் விதித்து, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தற்போது, இவர் மருத்துவ சிகிச்சைக்காக, ஜாமினில் இருக்கிறார்.
வீரேந்திர பப்பி: சித்ரதுர்கா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பி மீது, சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கு உள்ளது. அமலாக்க துறையால் கைதான இவர், ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
வினய் குல்கர்னி: தார்வாட் மாவட்ட பஞ்சாயத்து, பா.ஜ., கவுன்சிலராக இருந்த யோகேஷ் கவுடா கொலை வழக்கில், தார்வாட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னிக்கு தொடர்பிருந்ததால், சி.பி.ஐ.,யால் கைதாகி, ஆண்டுக்கணக்கில் சிறையில் இருந்தார். பின், உச்சநீதிமன்றத்தில் ஜாமின் பெற்று வெளியே வந்தார். ஆனால், சாட்சிகளை மிரட்டியதால், ஜாமின் ரத்தாகி, மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமின் மனு பல முறை தள்ளுபடியானது. சிறையிலேயே காலம் கடத்துகிறார்.
ஜனார்த்தன ரெட்டி: கொப்பால் மாவட்டம் கங்காவதி தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி மீது, சட்டவிரோத சுரங்கத்தொழில் தொடர்பாக, பல வழக்குகள் உள்ளன. விசாரணை கட்டத்தில் உள்ளன. இவரும் கைதாகி ஆண்டுக்கணக்கில் சிறையில் இருந்தவர். ஜாமினில் வெளியே வந்த இவர், தனிக்கட்சி து வங்கி கங்காவதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் மீண்டும் பா.ஜ.,வில் இணைந்தார். இவரும் தற்போது ஜாமினில் உள்ளார்.
பைரதி பசவராஜ்: பெங்களூரின் கே.ஆர்.புரம் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ். ரவுடி பிக்லு சிவா கொலை வழக்கில் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கைது பீதியில் தலைமறைவாக இருந்து முன் ஜாமினுக்கு முயற்சித்தார். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில், முன் ஜாமின் மனு தள்ளுபடியானதால் கைது செய்யப்பட்டார். தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.
சுப்பாரெட்டி: சிக்கபல்லாபூர் மாவட்டத்தின் பாகேபள்ளி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் சுப்பாரெட்டி: இவர் தேர்தலில் முறைகேடு செய்ததாக, பா.ஜ., வேட்பாளர் முனிராஜு வழக்கு தொடர்ந்தார். இவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால், அவரது எம்.எல்.ஏ., பதவியை ரத்து செய்து, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்துரு லமானி: கதக் மாவட்டத்தின், ஷிரஹட்டி தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சந்துரு லமானி. இவர் 1 கோடி ரூபாய் செலவிலான பணிகளை வழங்க, ஒப் பந்ததாரர் விஜய் பூஜாரா என்பவரிடம், 11 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்சம் வாங்கும் போது, சந்துரு லமானி, லோக் ஆயுக்தா போலீசாரிடம், கையும், களவுமாக சிக்கினார். தற்போது விசாரணையை எதிர்கொண்டுள்ளார். இவரை கட்சியில் இருந்து நீக்க, பா.ஜ., மேலிடம் ஆலோசிப்பதாக, தகவல் வெ ளியாகியுள்ளது.
இதேபோன்று, வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா அமைச்சர் பதவியை இழந்தார்.
- நமது நிருபர் -

