ADDED : ஏப் 02, 2026 03:04 AM

பெங்களூரு: ஐ.பி.எல்., போட்டிக்கு இலவச டிக்கெட் என்ற பெயரில் நடக்கும் சைபர் மோசடி குறித்து, பெங்களூரு நகர போலீசார் நுாதன முறையில்விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பெங்களூரு நகர போலீசார் தங்கள் அதிகாரப்பூர்வ, 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில், இலவச ஐ.பி.எல்., டிக்கெட்டுகள் வழங்குவதாக நேற்று பதிவிட்டனர். இதில், இலவச டிக்கெட்டுகளை பெறுவதற்கு இணைப்பை, 'கிளிக்' செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை நம்பி, குறிப்பிட்ட இணைப்பை கிளிக் செய்து உள்நுழைந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 'முட்டாள்கள் தினத்தன்று நீங்கள் ஏமாந்துவிட்டீர்கள்; இது, சைபர் மோசடி குறித்த விழிப்புணர்வு; இது போன்ற இணைப்புகளை கிளிக் செய்து பணத்தை இழக்காதீர்கள்,' என இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து, போலீசார் கூறியதாவது:
இலவச ஐ.பி.எல்., டிக்கெட்டுகள் என்ற பெயரில் சைபர் மோசடிகள் அதிகளவில் நடக்கின்றன. இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கே நுாதன முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இலவச டிக்கெட், பரிசு என்ற இணைப்புகளை யாரும் கிளிக் செய்ய வேண்டாம். ஓ.டி.பி., மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை யாரிடமும் பகிர வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
