ADDED : ஜூன் 13, 2026 10:50 PM
மைசூரு: குடும்ப பிரச்னையால், ஒரு பெண், தன் இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு, தானும் தற்கொலைக்கு முயற்சித்தார்.
மைசூரு மாவட்டம், சாலிகிராம தாலுகாவின் ஜவரேகவுடன கொப்பலு கிராமத்தில் வசிப்பவர் அனில்குமார், 30. இவரது மனைவி பிரியங்கா, 26. தம்பதிக்கு, 3 வயதில் த்ருதி, 1.5 வயதில் திஷா என, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
குடும்ப பிரச்னையால், தம்பதிக்கிடையே தினமும் சண்டை நடப்பது வழக்கம். இதனால், பிரியங்கா மன அழுத்தத்துக்கு ஆளானார். நேற்று முன் தினமும், இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. இது அவருக்கு வருத்தம் அளித்தது.
இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், இரண்டு குழந்தைகளை துாக்கிட்டு கொலை செய்தார். அதன் பின், தானும் விஷம் குடித்து, தற்கொலை செய்ய முயற்சித்தார்.
சிறிது நேரத்தில், வீட்டுக்கு வந்த கணவர், குழந்தைகள் இறந்து கிடந்ததையும், மனைவி விஷம் குடித்திருப்பதை கண்டு, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தார். பிரியங்காவின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தகவலறிந்து அங்கு வந்த, சாலிகிராம போலீசார், குழந்தைகளின் உடல்களை மீட்டனர். விசாரணையை துவக்கியுள்ளனர்.
