ADDED : ஜன 23, 2026 06:05 AM

மங்களூரு: கொலை, பாலியல் பலாத்காரம், கொள்ளையில் ஈடுபட்ட தண்டுபாள்யா கும்பலை சேர்ந்தவர், 29 ஆண்டுகளுக்கு பின், போலீசாரிடம் சிக்கினார்.
கடந்த 1997 அக்டோபர் 11ல், தட்சிணகன்னடா மாவட்டம், மங்களூரின், மாரிகுடி கிராஸ் அருகில் உள்ள வீட்டில் புகுந்த தண்டுபாள்யா கொள்ளை கும்பல், வீட்டில் இருந்த லுவிஸ் டிமெல்லோ, 80, ரஞ்சித் வேகன், 19, ஆகியோரை கொலை செய்தது. அதன்பின் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பியோடியது.
இந்த சம்பவத்தில் எட்டு பேர் ஈடுபட்டனர். ஏழு பேர் கைதாகி, சிறை தண்டனைக்கு ஆளாகினர். ஆனால் சிக்கஹனுமா, 60, என்பவர், போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். இவருக்கு மங்களூரின் ஜே.எம்.எப்.சி., இரண்டாவது நீதிமன்றம் 2010ல் 'பிடிவாரன்ட்' பிறப்பித்தது.
அன்று முதல் இவரை உர்வா போலீசார் தேடி வந்தனர். சிக்கஹனுமா தன் பெயரை மாற்றிக்கொண்டு வெவ்வேறு ஊர்களில் வசித்தார். இவர் ஆந்திரா, அன்னமய்யா மாவட்டத்தின் மதனபள்ளி என்ற இடத்தில் வசிப்பதாக, போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அங்கு சென்ற மங்களூரு போலீசார், நேற்று காலை அவரை கைது செய்தனர். இவர் மீது 13க்கும் மேற்பட்ட கொள்ளை, கொலை வழக்குகள் உள்ளன.
