ADDED : ஆக 23, 2026 11:06 PM

உப்பார்பேட்டை: திருநங்கையை கொன்று பணம், மொபைல் போனை கொள்ளையடித்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தார்வாடை சேர்ந்தவர் தேவி, 30. திருநங்கை. இரண்டு நாட்களுக்கு முன் பெங்களூரு வந்திருந்தார். சக திருநங்கையர் வசிக்கும் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை உணவு சாப்பிடுவதற்காக தேவியும், இன்னொரு திருநங்கையும், மெஜஸ்டிக் வந்தனர்.
சாப்பிட்ட பின், பஸ் நிலைய பகுதியில் நின்றிருந்தனர். அங்கு வந்த ராமமூர்த்திநகரை சேர்ந்த கவுதம், 29, என்பவர், தேவியிடம் பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால், தன்னிடம் இருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டினார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த தேவியிடம் இருந்து 200 ரூபாய், மொபைல் போனை கொள்ளையடித்து பைக்கில் தப்பினார். தேவி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில், கவுதமை, உப்பார்பேட்டை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடந்த போது அவர் குடிபோதையில் இருந்ததாலும், பணம் கொடுக்க மறுத்து தேவி திட்டியதாலும் கொலை நடந்தது தெரிந்தது.
