ADDED : மே 24, 2026 01:59 AM

- நமது நிருபர் -
கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிப்பவராக இருந்தாலும், யாராவது உதவி கேட்டால், செய்ய தயங்குவோரே அதிகம். இன்றைய கலியுகத்தில், மற்றவருக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர்கள், மிகவும் குறைவு.
சக மனிதர்களுக்கு உதவ மனம் வராத மக்களுக்கு நடுவே, தான் சம்பாதிக்கும் சொற்ப வருவாயில், ஒரு பகுதியை பறவைகளுக்கு செலவிடும் நெசவாளர், மற்றவருக்கு முன் மாதிரியாக திகழ்கிறார். இப்படியும் சமூக அக்கறையை வெளிப்படுத்தலாம். அதற்கு வசதியானவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை, அவர் நிரூபித்துள்ளார்.
சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவின், காஞ்சல்லி கிராமத்தில் வசிப்பவர் முருகேஷ்.
இவர் கைத்தறியில் பட்டுச்சேலை நெய்யும் நெசவாளர். இவர் நாள் முழுவதும் கஷ்டப்பட்டு, சேலை செய்தால் மாதந்தோறும் இவருக்கு, 20,000 ரூபாய் ஊதியம் கிடைக்கும். சுற்றிலும் மலைகள், குன்றுகள், அடர்ந்த வனப்பகுதி நடுவில், காஞ்சல்லி கிராமம் உள்ளது.
இங்கிருந்து, 25 கி.மீ., தொலைவில் உள்ள ஹனுார் உள்ளது. கோடை காலத்தில் இங்கு குடிநீர் தட்டுப்பாடு அதிகம். குடிநீர் இல்லாமல் பறவைகள் பரிதவிக்கும். இதை கண்ட முருகேஷ், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை குறுக்காக வெட்டி, அவற்றில் கயிறு கட்டி காஞ்சல்லி முதல் ஹனுார் வரை, வழி நெடுகிலும் மரங்கள், செடிகளில் தொங்க விட்டுள்ளார்.
தினமும் கடையில் குடிநீர் வாங்கி, மரத்தில் கட்டியுள்ள பாட்டில்களில் ஊற்றுகிறார். இந்த தண்ணீர், பறவைகளை தாகமில்லாமல் பார்த்து கொள்கிறது. இதற்காகவே, 300 பாட்டில்களை கட்டியுள்ளார்.
பறவை ஆர்வலரான முருகேஷ், மாதந்தோறும் தனது சம்பாத்தியத்தில் 3,000 ரூபாயை, பறவைகளுக்காக செலவிடுகிறார். இவரது வீட்டில், 80க்கும் மேற்பட்ட 'லவ் பேர்ட்ஸ்' வளர்க்கிறார். இவைகளை தன் குழந்தைகளை போல பராமரிக்கிறார்.
எங்காவது காயமடைந்த பறவைகள், விலங்குகளை கண்டால் உடனடியாக அவற்றை தன் வீட்டுக்கு கொண்டு வந்து, சிகிச்சை அளிக்கிறார். குணமடைந்த பின் பறவைகளை மீண்டும் பறக்க விடுகிறார்.
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும், பறவைகள், விலங்குகள் மீது இவர் காட்டும் பரிவை கண்டு, கிராமத்தினர் ஆச்சர்யம் அடைகின்றனர்!
