சட்டசபையில் நாகேந்திராவின் பதில்; பா.ஜ., புறக்கணிப்பு
சட்டசபையில் நாகேந்திராவின் பதில்; பா.ஜ., புறக்கணிப்பு
ADDED : ஆக 11, 2026 08:15 PM

பெங்களூரு: சட்டசபை கூட்டத்தொடரில், குற்றச்சாட்டை சுமந்துள்ள அமைச்சர் நாகேந்திராவின் பதிலை புறக்கணிக்க, பா.ஜ., முடிவு செய்துள்ளது.
இது குறித்து, முன்னாள் அமைச்சர் சுனில்குமார் கூறியதாவது:
சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர், ஆகஸ்ட் 13ம் தேதியன்று துவங்கவுள்ளது. இதில் அமைச்சர் நாகேந்திராவின் பதில்களை, பா.ஜ., புறக்கணிக்கும். வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில், நுாற்றுகணக்கான கோடி ரூபாய் முறைகேடு நடந்தது. இதில் நாகேந்திராவுக்கு தொடர்புள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை, இன்னும் முடியவில்லை.
விசாரணை கட்டத்தில் இருக்கும் போதே, அவரை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்து கொண்டனர். கடுமையான குற்றச்சாட்டை எதிர்கொண்ட அமைச்சரிடம், நாங்கள் எந்த பதில்களையும் கேட்டு பெற மாட்டோம்.
அமைச்சர் பதவியை அவர் ராஜிமானா செய்ய வலியுறுத்தி, சட்டசபையில் பா.ஜ., - ம.ஜ.த., இணைந்து போராட்டம் நடத்தும்.
நாகேந்திரா அமைச்சரவையில் நீடிக்க, தகுதியானவர் அல்ல. அவரை நீக்க வேண்டும் என, சட்டசபை உள்ளேயும், வெளியிலும் போராடுவோம். பிடதி டவுன்ஷிப் திட்டம், கே.பி.எஸ்.சி., முறைகேடுகளை எதிர்த்தும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
