குகைக்குள் அருள்பாலிக்கும் நெல்லிதீர்த்த சோமநாதேஸ்வரர்
குகைக்குள் அருள்பாலிக்கும் நெல்லிதீர்த்த சோமநாதேஸ்வரர்
ADDED : ஜூன் 30, 2026 04:48 AM

- நமது நிருபர் -
தட்சிண கன்னடாவின் மங்களூரில் நெல்லிதீர்த்தா என்ற இடத்தில், குகைக்குள் நெல்லிதீர்த்த சோமநாதேஸ்வரா சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் ஆன்மிகம், இயற்கை அதிசயங்கள் நிறைந்த வரலாற்று சிறப்புமிக்க இடமாக உள்ளது. கோவிலின் முதன்மை தெய்வமாக சிவன் உள்ளார். கருவறையில் உள்ள சிவலிங்கம் துாய்மையான சாளக்கிராம கற்களால் ஆனது.
மகா கணபதி, ஜபாலி மகரிஷி ஆகியோருக்கும் தனி சன்னிதிகள் உள்ளன. கோவிலின் நுழைவாயில் பகுதியில் இயற்கையான குகை உள்ளது. இந்த குகையின் உள்ளே பாறைகளில் இருந்து, நெல்லிக்காய் வடிவில் தண்ணீர் சொட்டி கொண்டே இருப்பதால், இந்த இடத்திற்கு நெல்லிதீர்த்தம் என பெயர் வந்துள்ளது.
குகையின் நுழைவு பகுதி அகலமாக இருந்தாலும் உள்ளே செல்ல, செல்ல பாதை குறுகிவிடும். குனிந்தும், மண்டியிட்டும், தவழ்ந்தும் தான் உள்ளே செல்ல முடியும். 200 மீட்டர் நீள குகையின் முடிவு பகுதியை அடையும் போது, பாதை அகலமாக இருக்கும். அங்கே சிவலிங்கமும், நெல்லிதீர்த்த குளமும் உள்ளது.
இந்த குகைக்குள் கிடைக்கும் களிமண் மருத்துவ குணம் கொண்டது என்று, பக்தர்களால் நம்பப்படுகிறது. தோல் நோய்களை குணமாக்கும் ஆற்றல் உண்டு என்பதால், பக்தர்கள் களிமண்ணை பிரசாதமாக எடுத்து செல்கின்றனர்.
காலை 7:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மட்டுமே, குகைக்குள் சென்று சிவனை தரிசிக்க முடியும். குகைக்குள் நுழையும் முன், அப்பகுதியில் உள்ள நாகப்ப கெரே குளத்தில் நீராடிவிட்டு, ஈரத்துணி அணிந்தபடியே செல்ல வேண்டும்.
