ADDED : ஏப் 02, 2026 03:02 AM

- நமது நிருபர் -
வெப்ப சலனத்தால் கர்நாடகாவில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்தாலும், பல இடங்களில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. குறிப்பாக வடமாவட்டங்களில் வெயில் கொளுத்துகிறது. வெயிலில் இருந்து தப்பிக்க நீர்நிலைகளை தேடி மக்கள் செல்ல ஆரம்பித்து உள்ளனர்.
அதிலும் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடாவுக்கு, சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்து உள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கடலுக்குள் படகில் சென்று வரவும் ஆர்வம் காட்டுகின்றனர். படகில் நடுக்கடலில் செல்லும் போது, படகில் இருந்து கடலுக்குள் ஒரு 'டைவ்' அடித்து விடலாமா என்று கூட நினைக்க தோன்றும். இப்படி நினைப்பவர்களுக்கு ஏற்ற இடமாக நேத்ராணி தீவு உள்ளது.
உத்தர கன்னடாவின் பட்கல் தாலுகா, முருடேஸ்வர் சிவன் கோவில் கடற்கரையில் இருந்து, கடலுக்குள் 5 கி.மீ., துாரத்தில் இந்த தீவு உள்ளது. கடற்கரையில் இருந்து படகில், நேத்ராணி தீவுக்கு அழைத்து செல்கின்றனர். அந்த தீவில் தான் 'ஸ்கூபா டைவிங்' நடக்கிறது.
ஆக்சிஜன் மாஸ்க், பாதுகாப்பு கவச உடை அணிந்து, கடலுக்குள் 'டைவ்' அடிக்க வேண்டும். 'ஸ்கூபா டைவிங்'கில் நன்கு அனுபவம் உள்ள பயிற்சியாளர்களும் உடன் வருவர். அவர்களின் உதவியுடன் கடலுக்குள் உள்ள, பல்வேறு இன மீன்கள், பவளப்பாறைகளை கண்டு ரசிக்கலாம். எப்படி நீச்சல் அடிக்க வேண்டும், என்ன மாதிரி செயல்பட வேண்டும் என்று, பயிற்சியாளர்கள் அறிவுறுத்தி கொ ண்டே இருப்பர்.
'ஸ்கூபா டைவிங்' கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு பயிற்சி அளிக்கும் மையங்களும், முருடேஸ்வரில் உள்ளன. காலை 9:00 மணிக்கு கடலுக்குள் அழைத்து சென்றால், மாலை 5:00 மணிக்கு தான், கரைக்கு அழைத்து வருகின்றனர்.
'ஸ்கூ பா டைவிங்' செல்ல ஒரு நபருக்கு 4,000 கட்டணம் நிர்ணயித்து உள்ளனர். ஆனால் ஒரு குழுவாக சுற்றுலா செல்லும் போது, 'ஸ்கூபா டைவிங்' அழைத்து செல்பவர்களிடம் கட்டணத்தை, குறைத்து பேசி கொள்ளலாம்.
எப்படி
செல்வது?
பெங்களூரில் இருந்து முருடேஸ்வர் 500 கி.மீ., துாரத்தில் உள்ளது.
மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து பட்கலுக்கு நேரடி பஸ் உள்ளது.
பட்கல்லில் இருந்து 12 கி.மீ., துாரத்தில் முருடேஸ்வர் உள்ளது. வாடகை காரில் செல்லலாம்.
ரயிலில் சென்றால் முருடேஸ்வர் ரோடு ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 2 கி.மீ., துாரத்தில் உள்ள கோவிலை அடையலாம்.
