நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகள் - வியாபாரிகள் வாக்குவாதம்
நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகள் - வியாபாரிகள் வாக்குவாதம்
ADDED : ஜூலை 01, 2026 11:23 PM

பெங்களூரு: நகரின் பல பகுதிகளிலுள்ள நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன.
பெங்களூரில் உள்ள சாலைகளின் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை நேற்று ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் துவக்கியது.
எலஹங்கா, பேகூர், ஜெ.பி.,நகர், ஹொரமாவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகள், 'பொக்லைன்' கனரக இயந்திரங்கள் உதவியுடன் அகற்றப்பட்டன. அப்போது, அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, பெங்களூரு நகர மேம்பாட்டு துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா கூறியதாவது:
ஐந்து மாநகராட்சிகளிலும் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று துவங்கியது. நடைபாதைகளை ஆக்கிரமித்த ஹோட்டல், தள்ளுவண்டி, சிறு கடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. பெங்களூரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள 2,000 கி.மீ., நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மட்டுமே அகற்றப்படுகின்றன.
நடை பாதை ஆக்கிரமிக்கப்படுவதாலேயே பல விபத்துகள் நடக்கின்றன. விபத்துகளை தவிர்க்கவே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தங்கள் கடைகளை வியாபாரிகள் வேறு இடங்களுக்கு மாற்றி அமைத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
ஜெயநகர் பகுதியிலுள்ள நடைபாதையில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள், 'பொக்லைன்' கனகர இயந்திரம் உதவியுடன் அகற்றப்பட்டன.
