கிரஹலட்சுமி, கிரஹஜோதி திட்டம் புதிதாக விண்ணப்பிக்க உத்தரவு
கிரஹலட்சுமி, கிரஹஜோதி திட்டம் புதிதாக விண்ணப்பிக்க உத்தரவு
ADDED : ஜூன் 14, 2026 11:36 PM
பெங்களூரு: கிரஹலட்சுமி, கிரஹஜோதி திட்ட பலன்களை பெற, புதிதாக விண்ணப்பிக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கர்நாடகாவில் முதல்வர் சிவகுமார் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
ஐந்து திட்டங்கள்
கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம், 2,000 ரூபாய்; கிரஹஜோதி திட்டத்தின் கீழ், 200 யூனிட்டிற்கு கீழ் பயன்படுத்துவோருக்கு இலவச மின்சாரம் மற்றும், அன்னபாக்யா திட்டத்தின் கீழ், 10 கிலோவுக்கு அரிசி, ரேஷன் பொருட்கள்; அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் சக்தி திட்டம்; வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம், 3,500 உதவி தொகை வழங்கும் யுவநிதி என ஐந்து திட்டங்கள் உள்ளன.
இந்த திட்டங்களை நிறைவேற்ற ஆண்டிற்கு 52,000 கோடி ரூபாய் அரசு செலவிடுகிறது. இதனால் அரசுக்கு நிதி சுமை ஏற்படுகிறது.
இந்நிலையில், மாநிலத்தில் பல காரணங்களால் உயிரிழந்த 50,000க்கும் மேற்பட்ட பெண்களின் வங்கிக்கணக்குகளுக்கு, கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ், மாதம் 2,000 ரூபாய் செல்வதை அரசு கண்டுபிடித்தது.இதன்மூலம் அரசுக்கு, 100 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டதும் தெரிந்தது.
அதுபோல, இலவசமாக மின்சாரம் வழங்கும் திட்டத்திலும் முறைகேடுகள் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வாக்குறுதி திட்டங்களில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும் என, முதல்வர் சிவகுமார் அறிவித்தார்.
அதன்படி, கிரஹலட்சுமி, கிரஹஜோதி திட்டங்களை பெற ஏற்கனவே விண்ணப்பித்து பலன்களை பெற்றவர்களும், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.
குடும்ப தலைவி அல்லது அவரது கணவர் வருமான வரி செலுத்துபவராக இருந்தால், கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ் இனி அவர்களுக்கு பணம் கிடைக்காது. அதுபோல, போலியான பி.பி.எல்., கார்டுகளை பயன்படுத்தி இந்த திட்டத்தில் இணைந்தவர்களை கண்டறியவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
சர்வர் பிரச்னை
அரசின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக பெண்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தகுதியற்ற பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு திட்டத்தின் பலன்கள் கிடைக்காதபடி அரசு செய்யலாம்.
அதை விட்டு அனைவரையும் மீண்டும் விண்ணப்பிக்க சொல்வது சரியல்ல; விண்ணப்பிக்கும் போது சர்வர் பிரச்னை உட்பட பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடலாம். இந்த முடிவை அரசு கைவிட வேண்டும் என, பெண்கள் கூறுகின்றனர்.
வாக்குறுதி திட்டங்களை நிறைவேற்ற அரசிடம் பணம் இல்லை; இதனால் திட்டங்களில் திருத்தம் செய்கின்றனர். வாக்குறுதி திட்டங்கள் நிறுத்தப்படலாம் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சிக்கின்றனர்.
ஆனால் வாக்குறுதி திட்டங்கள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது; தகுதியானவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று, முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார்.
