பாலியல் குற்றம் குறித்து சர்ச்சை மன்னிப்பு கேட்ட பரமேஸ்வர்
பாலியல் குற்றம் குறித்து சர்ச்சை மன்னிப்பு கேட்ட பரமேஸ்வர்
ADDED : ஏப் 09, 2025 07:10 AM

பெங்களூரு: பெரிய நகரங்களில் பாலியல் தொல்லை நடப்பது வழக்கமான விஷயம் தான் என கூறியதற்கு உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பெண்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
பெங்களூரு, சுத்தகுன்டேபாளையாவில் கடந்த 4ம் தேதி, இளம்பெண்ணுக்கு சிலர் பாலியல் தொல்லை அளித்துவிட்டு, தப்பியோடினர். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தது.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், 'பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் பாலியல் தொல்லைகள் நடப்பது எல்லாம் வழக்கமான விஷயம் தான்' என கூலாக கூறியிருந்தார்.
அமைச்சரின் கருத்துக்கு பா.ஜ., - ம.ஜ.த., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இது அரசியலை தாண்டியும், பெண்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியது.இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து, பெங்களூரில் நேற்று பரமேஸ்வர் அளித்த விளக்கம்:
சுத்தகுன்டேபாளையாவில் நடந்த பாலியல் தொல்லை குறித்த சம்பவம் குறித்து நான் கூறிய கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. இவ்விஷயத்தில் பெண்கள் மனம் புண்பட்டு இருந்தால், அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
நிர்பயா திட்டம் உட்பட மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பிற்காக பல திட்டங்களை வழங்கி உள்ளேன். மற்ற மாநிலங்களை விட கர்நாடகாவில் நிர்பயா நிதி, அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறேன்.
அவர்களின் பாதுகாப்பு குறித்த என்னுடைய நடவடிக்கைகள், வரும் நாட்களில் தெரிவிக்கப்படும். பெங்களூரு போலீஸ் கமிஷனர், சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,யிடம் தினமும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளேன்.
பா.ஜ., ஆட்சிக் காலத்தில் நடந்த பாலியல் சம்பவங்கள் குறித்து புள்ளி விபரங்களுடன் சபையில் தெரிவித்துள்ளேன். மத்திய அரசு எரிபொருள், காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதற்கு பா.ஜ.,வினர் பதிலளிக்க வேண்டும். அதன் பிறகு காங்கிரஸ் பதில் அளிக்கும்.
பணிகள் அதிகமாக இருப்பதால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திற்கு செல்ல முடியவில்லை. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை, மாநிலத்தில் செயல்படுத்த தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
