ADDED : ஜூலை 05, 2025 06:26 AM

பெங்களூரு: ''திடக்கழிவு மேலாண்மை பணியாளர்கள், தங்கள் உடல் நலனை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,'' என, பெங்களூரு மாநகராட்சி நிர்வாக அதிகாரி துஷார் கிரிநாத் கேட்டுக் கொண்டுள்ளார்.
பெங்களூரு மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை பிரிவில் பணி செய்யும் அதிகாரிகள், ஊழியர்களுடன் மாநகராட்சி நிர்வாக அதிகாரி துஷார் கிரிநாத் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:
திடக்கழிவு மேலாண்மை பணியாளர்கள், தங்கள் உடல் நலனை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தேவையான சிகிச்சை பெற வேண்டும். இதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற, மாநகராட்சி நிர்வாகம் முன்வந்துள்ளது. இவர்களுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
பெங்களூரு கிழக்கு, மேற்கு, தெற்கு, பொம்மனஹள்ளி, மஹாதேவபுரா ஆகிய ஐந்து மண்டலங்களில் பணிபுரியும் 600க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு முதல்கட்டமாக காலநிலை குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.