மக்களின் ஆரோக்கியத்தில் விளையாடினால் மன்னிக்க முடியாது: காதர் எச்சரிக்கை
மக்களின் ஆரோக்கியத்தில் விளையாடினால் மன்னிக்க முடியாது: காதர் எச்சரிக்கை
ADDED : ஆக 09, 2026 11:13 PM

பெங்களூரு: “பெங்களூரில் விற்கப்படும் தரமற்ற அழகு சாதன பொருட்களின் தரத்தை, மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் கண்காணிக்கிறது. லிப்ஸ்டிக்குகள், முக கிரீம்கள் மாதிரிகளை, ஆய்வகத்துக்கு அனுப்ப தயாராகிறது. பொது மக்களின் ஆரோக்கியத்தில் விளையாடுவதை, அரசு மன்னிக்காது,” என சுகாதாரத்துறை அமைச்சர் காதர் எச்சரித்தார்.
இது குறித்து, நேற்று அவர் அளித்த பேட்டி:
பெங்களூரில் போலியான, தரம் இல்லாத அழகு சாதன பொருட்கள் விற்கப்படுகின்றன. இவற்றை கட்டுப்படுத்த, மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது.
லிப்ஸ்டிக், முகத்தில் தடவும் கிரீம் உட்பட, பல்வேறு அழகு சாதன பொருட்கள் அடங்கிய பட்டியல் தயாரித்துள்ளது. இவற்றின் மாதிரிகளை சேகரித்து, ஆய்வகத்துக்கு அனுப்ப தயாராகிறது.
பெங்களூரின் மார்க்கெட்களில், 'பிராண்டடு' நிறுவனங்களின் பெயரில், போலியான லிப்ஸ்டிக், பவுடர்கள், முக கிரீம், சரும கிரீம்கள் உட்பட பல்வேறு அழகு சாதன பொருட்கள் விற்கப்படுவது, அதிகாரிகளின்கவனத்துக்கு வந்துள்ளது.
இது குறித்து, சுகாதாரத்துறை சார்பில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அனைத்து பொருட்களின் மாதிரிகள், பரிசோதனைக்கு அனுப்பப்படும். இவை தரமானது இல்லை என்பது உறுதியானால், அந்த பொருட்களுக்கு தடை விதிக்க, சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கும்.
உணவு மற்றும் அழகு சாதன பொருட்கள் என, இரண்டுமே வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனா நேரத்திலும் கூட, இதன் வர்த்தகத்தில் சரிவு ஏற்படவில்லை.
மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை கொடுத்து, பொருட்களை வாங்குகின்றனர். இவர்களுக்கு தரமற்ற பொருட்களை கொடுத்து ஏமாற்றுவது, எந்த விதத்தில் சரியாகும்.
தரமற்ற உணவு, தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தினால், சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த விஷயத்தில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். சிறு வியாபாரிகள் மட்டுமின்றி, நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்களும் தங்களின் தவறை திருத்தி கொள்வது அவசியம்.
மக்களின் ஆரோக்கியத்தில் விளையாடுவதை, அரசு சகிக்காது. தவறு செய்தவர்கள், எவ்வளவு செல்வாக்கு உள்ளவர்களாக இருந்தாலும், நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
