/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பி.எம்.டி.சி., பஸ் சேவை ராம்நகர் வரை விரிவாக்கம்
/
பி.எம்.டி.சி., பஸ் சேவை ராம்நகர் வரை விரிவாக்கம்
ADDED : செப் 17, 2025 07:43 AM

பெங்களூரு தெற்கு : ''பி.எம்.டி.சி., பஸ் சேவை, பெங்களூரு தெற்கு மாவட்டம், ராம்நகர் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதை பயணியர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்,'' என, பெங்களூரு தெற்கு மாவட்ட பொறுப்பு வகிக்கும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
பெங்களூரு தெற்கு மாவட்டம், ராம்நகருக்கு பெங்களூரு நகர போக்குவரத்தை நீட்டிக்க, மாநில போக்குவரத்துத் துறை முடிவு செய்தது. இதன்படி, ராம்நகரில் பி.எம்.டி.சி., பஸ் சேவையை, போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி நேற்று துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
பி.எம்.டி.சி., பஸ் சேவை, பெங்களூரு தெற்கு மாவட்டம், ராம்நகர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை பயணியர் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ராம்நகரில் பி.எம்.டி.சி., பஸ்கள் நிறுத்த இடம் ஒதுக்கும் வரை, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்தப்படும். பெங்களூரை சுற்றி உள்ள மாவட்டங்களுக்கு, பி.எம்.டி.சி., பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோன்று, பி.எம்.டி.சி., பஸ்கள், ராம்நகரில் உள்ள சுக்கனஹள்ளி வரை இயக்கப்படும்.
போக்குவரத்து நிறுவனத்துக்கு 5,800 புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. ஓட்டுநர்கள், நடத்துநர்கள், மெக்கானிக்குகள் உட்பட 10 ஆயிரம் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
'சக்தி' திட்டத்தால், ஒவ்வொரு நாளும் 60 முதல் 65 லட்சம் பெண்கள், பஸ்களில் பயணம் செய்கின்றனர்.
ராம்நகர் எல்லையில் கெல்கலில் இருந்து மாயகனஹள்ளி வரை; ஐசூர் தண்ணீர் தொட்டியில் இருந்து விஜயநகர் வரை; கெம்பேகவுடா தோடியில் இருந்து யாரப் நகர் வரை இந்த பஸ்கள் இயக்கப்படும்.
இதன் மூலம் ராம்நகர் மக்களின் நீண்டகால கனவு நனவாகி உள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்காக நகருக்கு வருபவர்கள், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் என, அனைத்து தரப்பு மக்களுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
சாலை குறுகலாக உள்ள இடங்களில் மினி பஸ்கள் இயக்கப்படும். ராம்நகரை சுற்றி உள்ள பகுதிகளில் இன்னும் போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களை கண்டறிந்து, பஸ் சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓராண்டில் ராஜிவ் காந்தி பல்கலைக்கழகம் திறக்கப்படும். இது பலருக்கு மருத்துவ ரீதியாக பயனுள்ளதாக இருக்கும். மாவட்டத்தில் உள்ள பல கோவில்களுக்கு நிதி விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ராம்நகரில் சாலைகள், வடிகால் மேம்பாட்டுக்கு, 200 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. ராம்நகரில் 157 கோடி ரூபாயில் பூங்கா அமைக்கவும்; இப்பகுதி மக்களுக்கு காவிரி குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.