/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'போக்சோ' வழக்கில் கைதானவர் நீதிமன்றத்தில் தற்கொலை
/
'போக்சோ' வழக்கில் கைதானவர் நீதிமன்றத்தில் தற்கொலை
ADDED : அக் 09, 2025 11:03 PM

ஹலசூரு கேட்: 'போக்சோ' வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது, நீதிமன்ற கட்டடத்தின் 5வது மாடியில் இருந்து குதித்து விசாரணை கைதி தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு, கே.ஆர்.புரம் ஏ.நாராயணபுரா ஆகாஷ் நகரை சேர்ந்தவர் கவுதம், 30. தனக்கு அறிமுகமான 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக, கடந்த ஏப்ரல் மாதம் இவரை ஆடுகோடி போலீசார் கைது செய்தனர். அவர் மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டது. பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை, சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று சிறையில் இருந்து விசாரணைக்காக கவுதம் அழைத்து வரப்பட்டார்.
நீதிமன்றத்தின் 5வது மாடியில் உள்ள நீதிபதி அறையின் முன் அவர் உறவினர்கள், குடும்பத்தினர் நின்றிருந்தனர். அவர்களை பார்த்து கவுதம், மன வருத்தம் அடைந்தார். தலையை குனிந்தபடியே சென்றார்.
நீதிபதி அறையின் முன் நின்றிருந்த கவுதம், போலீசார் பார்க்காத நேரத்தில், மாடியில் இருந்து கீழே குதித்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் டி.சி.பி., அக் ஷய் மச்சீந்திரா, நீதிமன்றத்திற்கு சென்று போலீசாரிடம் தகவலை பெற்றுக் கொண்டார். ஹலசூரு கேட் போலீசார் விசாரிக்கின்றனர். விசாரணை கைதி தற்கொலை சம்பவத்தால், நீதிமன்ற வளாகத்தில் நேற்று காலையில் பரபரப்பு ஏற்பட்டது.