ADDED : மார் 08, 2026 05:35 AM

கலபுரகி மாவட்ட மத்திய சிறையின் தலைமை கண்காணிப்பாளர் பதவியில் இருந்தவரும், தற்போது மைசூரில் உள்ள சிறைப்பணியாளர் பயிற்சி நிறுவனத்தில் சிறப்பு பணியில் உள்ளவருமான கே.ஏ.எஸ்., அதிகாரி அனிதா. இவர் தன் வாழ்வில் பல சிரமங்களை தாண்டி, உயர் பதவிக்கு வந்தவர்.
கோலார் மாவட்டம் சிந்தாமணியை சேர்ந்தவர். இவரை எப்படியாவது மருத்துவராக்க வேண்டும் என, அவரது தந்தை முயற்சித்தார். அதனால், பி.யு., படிக்கும் போது அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்தார்.
ஆனால், அனிதாவுக்கோ, போலீஸ் ஆக வேண்டும் என்று கனவு கண்டார். இருப்பினும், அவரது வீட்டின் விருப்பத்திற்காக, பல் மருத்துவ படிப்பில் சேர்ந்தார்.
அதன் பின், 2004ல் கர்நாடக மாநில சிறை சேவை தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றார். 2006ல் சிறை கண்காணிப்பாளர் பணியில் சேர்ந்தார். தான் ஆசைப்பட்ட போலீஸ் உடையை அணிந்தார். இதுவரை, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா, தேவனஹள்ளி, விஜயபுரா, தார்வாட், ஷிவமொக்கா, கலபுரகி சிறைகளில் பணியாற்றி உள்ளார்.
பணியில் இருக்கும் போது, சிறை முழுதையும் தன் கழுகு பார்வையில் சுற்ற விடுவார். இவர், பணியாற்றும் சிறைகளில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும். இதனால், கைதிகள் அனிதாவின் பெயரை கேட்டாலே கதி கலங்குவர்.
இவரின் பணிகளை பார்த்து, நுாற்றாண்டு பழமையான கலபுரகி மத்திய சிறையின் தலைமை கண்காணிப்பாளராக, 2024ல் நியமித்தனர். கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இவருக்கும் சில கைதிகளுக்கும் ஏற்பட்ட தகராறு, அரசியலாக உருவெடுத்தது. இதனால் அவர், கடந்த மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
தற்போது, மைசூரில் உள்ள சிறைப்பணியாளர் பயிற்சி நிறுவனத்தில் சிறப்பு பணியில் இருக்கிறார். இவர் குறித்த செய்திகள் சமீப காலமாக வருவதில்லை. இருப்பினும், தன் பணியை சீறும் சிறப்புமாக செய்து வருகிறார்.
- நமது நிருபர் -

