
பெங்களூரு: நடிகர் உபேந்திரா, தன் கட்சியான, 'பிரஜாகியா'வின் புதிய இணைய தளத்தை அறிமுகம் செய்துள்ளார். இதில் கட்சி தொண்டர்கள் அந்தந்த தொகுதிகளின் பிரச்னைகளை பற்றி விவரிக்க, வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது.
நடிகர் உபேந்திரா, கடந்த 2018ல், 'பிரஜாகியா' என்ற அரசியல் கட்சியை துவக்கினார். 2019 லோக்சபா தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் இக்கட்சி போட்டியிட்டது. ஆனால் எதிலும் வெற்றி பெறவில்லை.
உள்ளாட்சி தேர்தல்கள் வருவதால், தற்போது கட்சியை பலப்படுத்துவதில், உபேந்திரா ஆர்வம் காட்டுகிறார். கட்சிக்காக புதிதாக இணையதளத்தை, அறிமுகம் செய்துள்ளார்.
இதன் மூலம் கட்சி தொண்டர்கள், தங்கள் தொகுதியை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள, சுகாதாரம், அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்னைகளை கூற, வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஆர்வம் உள்ளவர்கள் கட்சியில் உறுப்பினராகலாம். இதன்படி இதில் 15,065 பேர் பதிவு செய்து கொண்டனர். ஜி.பி.ஏ., தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு, 250 பேர் இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளனர்.
கட்சி வேட்பாளராக போட்டியிடுவோர், ஒரே ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும், அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற பின், அவரவர் தொகுதி மக்களுக்காக பணியாற்ற வேண்டும்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, அவர்களின் செயல் திறன் ஆய்வு செய்யப்படும். 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள், அதிருப்தி தெரிவித்தால் கட்சி சார்பில், மீண்டும் ஆய்வு நடக்கும்.
அதிலும் அவரது பணித்திறன் திருப்தி இல்லையென்றால், அவர் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதற்கு சம்மதித்து கையெழுத்திட்டால் மட்டுமே, சீட் கிடைக்கும் எனவும் உபேந்திரா தெரிவித்தார்.
நடிகர் உபேந்திரா, எதையும் புதுமையாக செய்வதில் ஆர்வம் உடையவர். அதே போன்று இவரது கட்சி கொள்கைகளும் மாறுபட்டவை. மக்களுக்கு தொண்டு செய்யும் நோக்கில், அரசியல் கட்சியை துவக்கியதாக, உபேந்திரா பல முறை கூறியுள்ளார்.

