கணவரின் 2வது திருமணத்தை நிறுத்திய கர்ப்பிணி மனைவி
கணவரின் 2வது திருமணத்தை நிறுத்திய கர்ப்பிணி மனைவி
ADDED : மே 03, 2026 11:32 PM
தொட்டபல்லாபூர்: கணவரின் இரண்டாவது திருமணத்தை கர்ப்பிணி மனைவி தடுத்து நிறுத்தினார்.
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் நகரில் வசிப்பவர் குமார், 27. இவர் கேரளாவை சேர்ந்த இளம் பெண்ணை காதலித்தார். பெற்றோருக்கு தெரியாமல், ஓராண்டுக்கு முன் அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மனைவி கேரளாவில் வசிக்கிறார்.
அவ்வப்போது குமார், கேரளாவுக்கு சென்று மனைவியை பார்த்து வருவது வழக்கம். தற்போது மனைவி ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
இதையறிந்த குமாரின் பெற்றோர், அவரது திருமணத்தை ஏற்காமல், வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி, மகனுக்கு நெருக்கடி கொடுத்தனர். பெற்றோரின் நெருக்கடிக்கு பணிந்த அவர், திருமணத்துக்கு சம்மதித்தார்.
தொட்டபல்லாபூரில் உள்ள பசவ பவனில், நேற்று காலை திருமணம் நடக்கவிருந்தது. இவருக்கு ஏற்கனவே திருமணமான விஷயத்தை, பெண் வீட்டாரிடம் மூடி மறைத்தனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவு, மனைவிக்கு போன் செய்த குமார், பெற்றோர் தனக்கு பலவந்தமாக இரண்டாவது திருமணம் நடத்தும் தகவலை கூறி, தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என, தெரிவித்தார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவி, இரவோடு இரவாக கேரளாவில் இருந்து புறப்பட்டு, தொட்டபல்லாபூருக்கு வந்தார்.
திருமணம் நடக்கவிருந்த மண்டபத்தில் சடங்குகள் துவங்குவதற்கு முன்பே, நேற்று காலை அங்கு வந்தார். தனக்கும், மணமகன் குமாருக்கும் ஏற்கனவே திருமணம் நடந்ததை, தற்போது தான் ஏழு மாத கர்ப்பணி என்பதை கூறி, ஆவணங்களை காட்டினார். அப்போதுதான் பெண் வீட்டாருக்கு, குமார் திருமணமானவர் என்பது தெரிந்து, அதிர்ச்சி அடைந்தனர்.
மண்டபத்தில் குழப்பமான சூழ்நிலை உருவானது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த தொட்டபல்லாபூர் நகர் போலீசார், முதல் மனைவி அளித்த புகாரின்படி, குமாரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று, விசாரணை நடத்துகின்றனர்.
முதல் திருமணம் நடந்ததற்கான சாட்சி, ஆதாரங்களை ஆய்வு செய்கின்றனர். திருமணம் நின்றதால், மணப்பெண்ணும், அவரது குடும்பத்தினரும் வருத்தத்தில் உள்ளனர்.
