/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்ப்பிணி கழிப்பறை செல்லும் வழியில் குழந்தை பிறந்து கீழே விழுந்து மரணம்
/
கர்ப்பிணி கழிப்பறை செல்லும் வழியில் குழந்தை பிறந்து கீழே விழுந்து மரணம்
கர்ப்பிணி கழிப்பறை செல்லும் வழியில் குழந்தை பிறந்து கீழே விழுந்து மரணம்
கர்ப்பிணி கழிப்பறை செல்லும் வழியில் குழந்தை பிறந்து கீழே விழுந்து மரணம்
ADDED : நவ 19, 2025 09:06 AM
ஹாவேரி: மாவட்ட அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால், கழிப்பறைக்கு செல்லும் வழியில் கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்து கீழே விழுந்தது. இதில், தலையில் அடிபட்டு சிசு உயிரிழந்தது.
ஹாவேரி மாவட்டம், ராணிபென்னுாரின் கோகலா கிராமத்தை சேர்ந்தவர் ரூபா, 30. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு, நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக, ஹாவேரி மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
அங்கு போதிய படுக்கைகள் இல்லாததால், ரூபா தரையில் அமர வைக்கப்பட்டார். வலி தாங்க முடியாமல் ரூபா சிரமப்பட்டார். இதை பார்த்த உறவினர்கள், டாக்டர், நர்சிடம் படுக்கை கேட்டும் யாரும் ஒதுக்கித் தரவில்லை.
காலை 9:00 மணியளவில் கழிப்பறைக்கு ரூபா சென்றார். நடந்து சென்று கொண்டிருந்தபோது, ரூபாவுக்கு குழந்தை பிறந்து, கீழே தரையில் விழுந்தது. தலையில் பலத்த அடி பட்டதால், சிசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதை பார்த்த ரூபா, அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். மருத்துவமனையில் இருந்த மற்ற பெண்களும், வேதனை அடைந்தனர். பிறந்த குழந்தையை கையில் கூட எடுக்க முடியாமல் கீழே விழுந்து இறந்ததை எண்ணி கண்கலங்கினர்.
ரூபாவின் உறவினர்கள் கூறுகையில், 'பிரசவ வலியால் ரூபா கதறிய போதும், டாக்டர்கள், செவிலியர்கள் யாரும் வரவில்லை. செவிலியர்கள், அவரவர்களின் மொபைல் போனில் மும்முரமாக இருந்தனர். குழந்தையின் இறப்புக்கு டாக்டர்கள், செவிலியர்களே காரணம்' என்றனர்.
மாவட்ட மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர் ஹாவனுார், ''யார் தவறு செய்திருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

