விசாரணை கைதிகள் அடிதடி சிறை ஊழியர் மீது தாக்குதல்
விசாரணை கைதிகள் அடிதடி சிறை ஊழியர் மீது தாக்குதல்
ADDED : ஆக 30, 2026 11:24 PM
ஹாசன்: சிறைக்குள் விசாரணை கைதிகள் இடையே அடிதடி ஏற்பட்டது. தடுக்க வந்த சிறை ஊழியர்களை, கைதிகள் தாக்கினர்.
ஹாசன் நகரின் சந்தேபேட் கிராமத்தில், மாவட்ட சிறை உள்ளது. நேற்று காலையில் கைதிகள் போன் செய்வதற்காக வரிசையில் நின்றிருந்தனர். அப்போது விசாரணை கைதிகளான மோகன்குமார், ரங்கசாமி இடையே, யார் முதலில் போன் செய்வது என்பதில் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி, இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.
இதை பார்த்த சிறை ஊழியர்கள் பரசுராம், வீரேஷ் சங்கமத் ஆகியோர், கைதிகளின் சண்டையை விலக்கி விட முயற்சித்தனர். இதற்கிடையே, சிறையின் கணினி அறைக்குள் புகுந்த, ஒன்பது விசாரணை கைதிகள், சிறை ஊழியர்கள் பலரை தாக்கினர். வீரேஷ் சங்கமதை கீழே தள்ளி தாக்கியதில், அவர் பலத்த காயமடைந்தார்.
சிறை ஊழியர்களை தாக்கி, அவர்களின் பணிக்கு இடையூறு செய்த கைதிகள் நிரூப், பரத், சேத்தன் என்ற ஸ்லம் சேது, மோகன்குமார், சசிதர் உட்பட பலர் மீது ஹாசன் நகர் போலீஸ் நிலையத்தில், சிறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். ஹாசன் மாவட்ட மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.
