ADDED : நவ 18, 2025 04:58 AM

பீதர்: தாயை கொன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி, மற்ற கைதிகளின் தொல்லையால், சிறை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பீதர் மாவட்டம், பசவகல்யாண் தாலுகாவின் கவுர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தப்பா மெஹ்த்ரே, 46. நடப்பாண்டு ஏப்ரலில், குடும்ப பிரச்னை காரணமாக, தனது தாயார் சுந்தராபாயை, கொலை செய்தார்.
இவரது சகோதரிகள் கொடுத்த புகாரின்படி, போலீசார், கந்தப்பாவை கைது செய்து, ஹூம்னாபாத் சிறையில் அடைத்தனர். கடந்த இரண்டரை மாதங்களாக சிறையில், மற்ற கைதிகள் இவரை கொடுமைப்படுத்தி உள்ளனர். இது குறித்து சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் அதிருப்தியில் இருந்த அவர், நேற்று முன்தினம் மாலையில், சிறை வளாகத்தில் இருந்த மரத்தில் ஏறி, அருகில் இருந்த கட்டடத்திற்கு தாவினார். அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் சிறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். கந்தப்பா இறந்த சம்பவத்தை, அன்றைய தினம் இரவு 9:00 மணிக்கு அவரின் உறவினர்களுக்கு போலீசார் தெரிவித்து உள்ளனர்.
மாலையில் நடந்த சம்பவத்தை இரவில் தெரிவித்ததால் கோபமடைந்த குடும்பத்தினர், விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஹூம்னாபாத் போலீசில் புகார் செய்துள்ளனர்.
போலீசார் விசாரிக்கின்றனர்.

