/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கன்னடம் பேசக்கூடாது என தடை விதித்த தனியார் கல்லுாரி விடுதி வார்டன் கைது
/
கன்னடம் பேசக்கூடாது என தடை விதித்த தனியார் கல்லுாரி விடுதி வார்டன் கைது
கன்னடம் பேசக்கூடாது என தடை விதித்த தனியார் கல்லுாரி விடுதி வார்டன் கைது
கன்னடம் பேசக்கூடாது என தடை விதித்த தனியார் கல்லுாரி விடுதி வார்டன் கைது
ADDED : ஜன 06, 2026 08:47 AM

பெங்களூரு: 'மாணவர்கள் கன்னடம் பேசக்கூடாது; ஹிந்தி மட்டுமே பேச வேண்டும்' என கட்டளையிட்ட தனியார் விடுதி வார்டனை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு பன்னரகட்டா பகுதியில் உள்ளது, ஏ.எம்.சி., தனியார் பொறியியல் கல்லுாரி. இக்கல்லுாரியில் உள்ள விடுதியில் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கிப் படிக்கின்றனர்.
விடுதியின் கண்காணிப்பாளரான வார்டன் சுரேஷ், மாணவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டு உள்ளார்.
விடுதியில் கன்னடம் பேசக்கூடாது; ஹிந்தியில் மட்டுமே உரையாட வேண்டும் என்று கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார்.
'கன்னடம் பேசுவதாக இருந்தால் உங்கள் வீட்டிற்கு சென்று பேசுங்கள்' என்றும் கூறியுள்ளார்.
இதனால், மாணவர்கள் அதிருப்தி அடைந்தனர். தங்களின் தாய் மொழியான கன்னடாவை வார்டன் இழிவுபடுத்துவதாக கருதினர்.
ஆத்திரம் அடைந்த அவர்கள், நேற்று முன்தினம் விடுதி கண்காணிப்பாளர் சுரேஷை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பான வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையறிந்த கன்னட அமைப்பினர் நேற்று கல்லுாரி அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது, பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பன்னரகட்டா போலீசார் பேச்சு நடத்தினர். இதனால், கல்லுாரியில் நடக்க இருந்த அகமதிப்பீடு தேர்வு ரத்து செய்யப்பட்டது.
மாணவர்களின் புகாரில், பன்னரகட்டா போலீஸ் நிலையத்தில் சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நிலைமையை புரிந்து கொண்ட கல்லுாரி நிர்வாகம், சுரேஷை சஸ்பெண்ட் செய்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.
'கன்னடத்திற்கு எப்போதும் மரியாதை உண்டு. அடுத்த இரு வாரங்களில் கன்னட ராஜ்யோத்சவா கல்லுாரி வளாகத்தில் கொண்டாடப்படும்' என, கல்லுாரி நிர்வாகம் கூறியது.

