/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பி.யு., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இடஒதுக்கீடு கடைப்பிடிக்க கறார் உத்தரவு
/
பி.யு., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இடஒதுக்கீடு கடைப்பிடிக்க கறார் உத்தரவு
பி.யு., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இடஒதுக்கீடு கடைப்பிடிக்க கறார் உத்தரவு
பி.யு., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இடஒதுக்கீடு கடைப்பிடிக்க கறார் உத்தரவு
ADDED : மே 12, 2025 06:50 AM
பெங்களூரு: கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இதையடுத்து, பி.யு., கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை மும்முரமாக நடக்கிறது.
இந்நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து பி.யு., கல்லுாரிகளும் மாணவர் சேர்க்கையின் போது, இடஒதுக்கீடு விதிமுறைகளை பின்பற்றும் படி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து, கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் பி.யு., கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையின் போது, இடஒதுக்கீடு விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
இந்த விதிகள் நடைமுறையில் இருப்பினும், பல கல்லுாரிகள் கடைப்பிடிக்கவில்லை. இம்முறை அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
இதனால், பட்டியல் சமூகம், பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயிலும் எண்ணிக்கை அதிகரிக்கும்.
தனியார் பள்ளிகளில் அரசு இடஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தடைசெய்யப்பட்டு உள்ளது.
அரசு பி.யு., கல்லூரிகளில் எஸ்.சி., - எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள் உள்ளிட்ட பிரிவுகள் வாரியாக, முன்னுரிமை அளிக்கப்பட்டு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதையே அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லுாரிகளிலும் பின்பற்ற வேண்டும்.
அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 64 சதவீதம் அரசு இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்படுவர். மீதமுள்ள சீட்டுகள் மேனேஜ்மென்ட் கோட்டா மூலம் நிரப்பப்படும். இதுவே, தனியார் கல்லுாரிகளில் அரசு 50 சதவீதமும்; மேனேஜ்மென்ட் கோட்டாவில் 50 சதவீதமும் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
இது குறித்து தொடக்க கல்வி அமைச்சர் மது பங்காரப்பா கூறுகையில், ''அனைத்து பி.யு., கல்லுாரிகளிலும் கல்வித்துறை அறிவுறுத்தலின் படியே, மாணவர்கள் சேர்க்கை நடக்க வேண்டும். அனைத்து கல்லுாரி நிர்வாகங்களும் இதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.