/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜாதி வாரி சர்வேக்கு பி.வி.ஆச்சார்யா எதிர்ப்பு
/
ஜாதி வாரி சர்வேக்கு பி.வி.ஆச்சார்யா எதிர்ப்பு
ADDED : செப் 29, 2025 06:42 AM

பெங்களூரு : ''கர்நாடக அரசு நடத்தும் ஜாதி வாரி சர்வேவில், பொது மக்கள் பங்கேற்காமல் இருப்பதே நல்லது. இதில் பங்கேற்றால், இவர்களின் தனிப்பட்ட தகவல்கள், தவறாக பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது,'' என மூத்த வக்கீல் பி.வி.ஆச்சார்யா தெரிவித்தார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை பற்றி, முழுமையான புள்ளி விபரங்களை தெரிந்து கொள்ளும் நோக்கில், மாநில அரசு, ஜாதி வாரி சர்வே நடத்துகிறது. இந்த சர்வே, பிராமணர் சமுதாயத்துக்கு சம்பந்தப்பட்டது அல்ல. சர்வே நடத்துவதில், இந்த சமுதாயத்தினருக்கு, எந்த விதத்திலும் பயன் இல்லை.
கர்நாடக அரசு நடத்தும் ஜாதி வாரி சர்வேவில், பொது மக்கள் பங்கேற்காமல் இருப்பதே நல்லது. இதில் பங்கேற்றால், நமது ஆதார் எண், வருமானம் உட்பட, 60 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டி வரும். மக்களின் தனிப்பட்ட தகவல்கள், தவறாக பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது என்பது, பல சட்ட வல்லுநர்களின் கருத்தாகும்.
இத்தகைய சர்வே தேவையற்றது. யாரிடமும் பலவந்தமாக தகவல்களை பெறக்கூடாது. சர்வேவில் பங்கேற்பது, அவரவர் விருப்பம். இதில் பங்கேற்கும்படி வலியுறுத்த கூடாது என, கர்நாடக உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்' கர்நாடகாவில் கடந்த 22ம் தேதியில் இருந்து, ஜாதிவாரி சர்வே நடக்கிறது. அடுத்த மாதம் 7ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இப்பணிக்காக ஒதுக்கப்பட்ட ஆசிரியர்கள், பிற துறைகளின் அரசு ஊழியர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அரசு கூறியிருந்தது. சர்வே பணியை புறக்கணிக்கும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அமைச்சரவை கூட்டத்திலும் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், அரசின் உத்தரவையும் மீறி, தாவணகெரே ஜமபுரா அரசு துவக்க பள்ளி ஆசிரியர் மஞ்சுநாத், நாகனுார் கிராம அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் பசவராஜப்பா, மாயகொண்டா அரசு பள்ளி ஆசிரியர் துர்கப்பா ஆகியோர், சர்வே பணியில் ஈடுபடவில்லை. இதுபற்றி தாவணகெரே மாவட்ட கலெக்டர் கங்காதர்சாமி கவனத்திற்கு தகவல் கிடைத்தது.
விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், ஆசிரியர்கள் மூன்று பேரும் பதில் அளிக்கவில்லை. இதனால் அவர்களை ஆசிரியர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து, கலெக்டர் நேற்று உத்தரவிட்டார்.