/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் மூன்று இடங்களில் 'ரெய்டு' ரூ.13.55 கோடி போதைப்பொருள் பறிமுதல்
/
பெங்களூரில் மூன்று இடங்களில் 'ரெய்டு' ரூ.13.55 கோடி போதைப்பொருள் பறிமுதல்
பெங்களூரில் மூன்று இடங்களில் 'ரெய்டு' ரூ.13.55 கோடி போதைப்பொருள் பறிமுதல்
பெங்களூரில் மூன்று இடங்களில் 'ரெய்டு' ரூ.13.55 கோடி போதைப்பொருள் பறிமுதல்
ADDED : மார் 04, 2026 05:39 AM

பெங்களூரு: பெங்களூரில் மூன்று இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில், 13.55 கோடி ரூபாய் மதிப்பிலான, போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இளம்பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று அளித்த பேட்டி:
பெங்களூரு பாகலுாரில், போதை பொருள் விற்பனை நடப்பதாக, சி.சி.பி.,யின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட, ஒரு இளம்பெண் மற்றும் வாலிபரை கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் கேரளாவை சேர்ந்த அஸ்வின், 27, மொபீனா, 25, என்பது தெரிய வந்தது. பி.பி.ஏ., படிப்பை பாதியில் கைவிட்ட இருவரும், கடந்த ஓராண்டாக பெங்களூரு பாகலுாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி உள்ளனர். எளிதில் பணக்காரர் ஆகவும், சொகுசு வாழ்க்கை வாழவும் இருவரும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.
உயர்ரக கஞ்சா தாய்லாந்து நாட்டில் வசிக்கும் வின்சென்ட் என்பவர், அங்கிருந்து கூரியர் மூலம், இவர்களுக்கு போதை பொருட்களை அனுப்பி வைத்து உள்ளார். கைதான இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில், அவர்கள் வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து, 8,335 எல்.எஸ்.டி., ஸ்ட்ரிப்ஸ், 534 கிராம் சரஸ், ஐந்து கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு, 11.50 கோடி ரூபாய். கைதான இருவர் மீதும், பாகலுார் போலீசார் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
பார்சல் மூலம்... ஒயிட்பீல்டு போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்படி, கல்லுாரி மாணவர்கள், ஐ.டி., ஊழியர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்ற, ஒடிஷா மாநிலத்தின் லிங்கராஜ் தாஸ், 35, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 27 கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சா, 3 கிலோ 200 கிராம் எடையுள்ள ஆசிஷ் ஆயில் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு, 55 லட்சம் ரூபாய்.
கெம்பேகவுடா நகரில் உள்ள சர்வதேச தபால் நிலையத்திற்கு தாய்லாந்து நாட்டில் இருந்து பார்சல் மூலம் போதை பொருள் வந்திருப்பதாக கிடைத்த தகவலின்படி, தபால் நிலையத்தில் சி.சி.பி., போலீசார் நடத்திய சோதனையில், 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான 1.50 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பார்சல் யாருக்கு வந்ததோ அவரை தேடி வருகின்றனர்.
ஒட்டுமொத்தமாக மூன்று சம்பவங்களிலும், 13.55 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை, சீமந்த்குமார் சிங் பார்வையிட்டார்.

