'ரேபிடோ' டிரைவர் அலட்சியம் இளம்பெண் எலும்புகள் முறிவு
'ரேபிடோ' டிரைவர் அலட்சியம் இளம்பெண் எலும்புகள் முறிவு
ADDED : ஜூலை 07, 2026 04:04 AM

ஜீவன்பீமாநகர்: ரேபிடோ டிரைவரின் அலட்சியத்தால் விபத்தில் சிக்கிய இளம்பெண்ணின் முதுகு, கை எலும்புகள் முறிந்தன.
கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்தவர் சானி கிருஷ்ணா, 32. பெங்களூரு பைரசந்திராவில் வசிக்கிறார். தொம்மசந்திராவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கடந்த மாதம் 17ம் தேதி வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு, 'ரேபிடோ' பைக்கில் சென்றார்.
பைக்கை ஓட்டிய ஆசிஷ் பாக் என்பவர், அதிவேகமாக சென்றுள்ளார். மெதுவாக செல்லும்படி சானி கிருஷ்ணா கூறியும் கேட்கவில்லை. பகமனே டெக் பார்க் பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த பைக்கில் இருந்து சானி கிருஷ்ணா விழுந்தார். பின்னால் வந்த டிராக்டர் அவர் மீது ஏறி இறங்கியது.
படுகாயம் அடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். எக்ஸ் ரே எடுத்து பார்த்த போது முதுகு, கை எலும்புகள் முறிந்தது தெரிந்தது.
மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதால், ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான கோழிக்கோடு அழைத்து செல்லப்பட்டு அங்கு உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். தற்போது வரை 20 லட்சம் ரூபாய் செலவாகி உள்ளது. ஆனால் ரேபிடோ நிறுவனம் 1 லட்சம் ரூபாய் தருவதாக பேரம் பேசியுள்ளனர்.
இதுகுறித்து சானி கிருஷ்ணாவின் பெற்றோர் நேற்று முன்தினம் ஜீவன்பீமா நகர் போலீசில் புகார் செய்தனர். விசாரணை நடக்கிறது.
