/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை நிராகரிப்பு!:
/
மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை நிராகரிப்பு!:
UPDATED : பிப் 13, 2026 05:53 AM
ADDED : பிப் 13, 2026 05:28 AM

பெங்களூரு நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஒயிட்பீல்டு - செல்லகட்டா; மாதவாரா - சில்க் இன்ஸ்டிடியூட் மற்றும் ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. சில்க் போர்டு - விமான நிலையம்; காலேன அக்ரஹாரா - நாகவாரா மெட்ரோ பாதை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு பாதையிலும் ரயில்கள் இயக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், பெங்களூரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும், விமான நிலைய சாலையில் உள்ள ஹெப்பாலில் இருந்து ஓசூர் சாலையில் உள்ள சர்ஜாபூர் வரை, 37 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்கும் திட்டத்தை, கர்நாடக அரசிடம் பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாக கழகம் முன்மொழிந்தது. இதற்கு அரசும் அனுமதி வழங்கி, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறைக்கு அறிக்கை அனுப்பியது. இத்திட்டத்திற்கு மத்திய அரசும் ஒப்புதல் வழங்கியது.
28 ரயில் நிலையம் இதற்கிடையில், ஹெப்பால் - சர்ஜாபூர் பாதைக்காக விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு சமர்பித்தது. ஹெப்பால், கங்காநகர், கால்நடை கல்லுாரி, மேக்ரி சதுக்கம், பேலஸ் குட்டஹள்ளி, கோல்ப் மைதானம், பசவேஸ்வரா சதுக்கம், கே.ஆர்.சதுக்கம், டவுன்ஹால், சாந்திநகர், நிம்ஹான்ஸ், டெய்ரி சதுக்கம், கோரமங்களா 2வது பிளாக், கோரமங்களா 3 வது பிளாக்.
ஜக்கசந்திரா, அகரா, இப்பலுார், பெல்லந்துார் கேட், கைகொண்டரஹள்ளி, தொட்டகன்னள்ளி, கார்மேலரம், அம்பேத்கர் நகர், கொடதி கேட், முத்தாநல்லுார் கிராஸ், டொம்மசந்திரா, சோமபுரா, கட அக்ரஹாரா ரோடு, சர்ஜாபூர் என, 28 மெட்ரோ ரயில் நிலையங்கள் வரும்; ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும், 767 கோடி ரூபாய் செலவாகும்; மொத்தமாக, 28,405 கோடி ரூபாய் திட்டத்திற்கு தேவைப்படுகிறது என, விரிவான திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மறுபகுப்பாய்வு இந்த திட்ட அறிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, 28,405 கோடி ரூபாய் என்பது அதிகமாக இருப்பதாக காரணம் காட்டி, அறிக்கையை திரும்ப அனுப்பியது.
இதையடுத்து பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த போக்குவரத்து நிறுவனம் உதவியுடன், திட்டத்தொகை மறுபகுப்பாய்வு செய்யப்பட்டது.
இரண்டாவதாக தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையில், ஒரு கிலோ மீட்டருக்கு பாதை அமைக்க ஆகும் செலவு 767 கோடி ரூபாயில் இருந்து 688 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டு, மொத்த செலவு 25,485 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டு, மத்திய அரசுக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அறிக்கையில், ஹெப்பால் - சர்ஜாபூர் இடையே ஈரடுக்கு மேம்பாலம் அமைப்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பயணியர் எண்ணிக்கை இந்த அறிக்கையையும், தற்போது மத்திய அரசு திருப்பி அனுப்பி உள்ளது. ஹெப்பால் - சர்ஜாபூர் இடையே ஈரடுக்கு மேம்பாலம் அமைப்பது சரிவராது என்றும் தெரிவித்துள்ளது. ஈரடுக்கு மேம்பாலம் அமைப்பது கார், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக மாறும்.
அதனால், மெட்ரோவுக்கு வரும் பயணியர் எண்ணிக்கை குறையும். நிதி நிலைமையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். தவிர்க்க முடியாத பட்சத்தில், முக்கிய சந்திப்பு பகுதிகளில் மட்டும் ஈரடுக்கு மேம்பாலம் அமைத்துக் கொள்ளலாம் என்றும், மத்திய அரசு தனது கருத்தை தெரிவித்து உள்ளது.
இதனால், மூன்றாவது முறையாக விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யும் நிலைக்கு, கர்நாடக அரசு தள்ளப்பட்டு உள்ளது. இப்பாதையில், 2030க்குள் மெட்ரோ ரயில் இயக்க அரசு திட்டமிட்டு இருந்தது. விரிவான திட்ட அறிக்கை இரண்டு முறை திரும்பி வந்திருப்பதன் மூலம், குறிப்பிட்ட காலத்திற்குள் பணியை முடிக்க முடியாது என்ற நிலைமையை ஏற்படுத்தி உள்ளது.

