ADDED : ஜூலை 03, 2025 11:06 PM

பெங்களூரு: மெட்ரோ ரயில் கட்டண உயர்வு, மெட்ரோ மஞ்சள் பாதை தாமதம், பைக் டாக்சி தடை உள்ளிட்ட காரணங்களால் பி.எம்.டி.சி., பஸ்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை உயர்ந்து, வருமானமும் அதிகரித்துள்ளது.
பெங்களூரு மெட்ரோ ரயிலில் கடந்த பிப்ரவரியில் டிக்கெட் கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால், மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோர் பலரும், பி.எம்.டி.சி., பஸ்களில் பயணம் செய்ய துவங்கினர். பி.எம்.டி.சி., பஸ்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்தது.
அதேபோல, பொம்மசந்திரா முதல் ஆர்.வி., சாலை வரையிலான மஞ்சள் நிற மெட்ரோ ரயில் பாதை இன்னும் துவங்கவில்லை. இதை பயன்படுத்திக் கொண்ட பி.எம்.டி.சி., இந்த வழித்தடத்தில் அதிக பஸ்களை இயக்கியது. அத்துடன் பைக் டாக்சிக்கு சமீபத்தில், கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், குறைந்த இடங்களில் மட்டுமே நின்று செல்லும் 'எக்ஸ்பிரஸ் பஸ்கள்' சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்கும் பயணியரிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுபோன்ற காரணங்களால் பி.எம்.டி.சி.,க்கு வருமானம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பி.எம்.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:
பி.எம்.டி.சி., பஸ்சில் பயணியர் எண்ணிக்கை அதிகரித்ததால், 2,000 பஸ்கள் புதிதாக வாங்கப்பட்டன. இதனால் பஸ்களின் டிரிப் எண்ணிக்கை, ஒரு நாளைக்கு 54 ஆயிரத்திலிருந்து 62 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது.
பி.எம்.டி.சி., பஸ்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை 40 லட்சத்திலிருந்து 42 லட்சமாக உயர்ந்தது. இதன் மூலம், ஒரு நாள் வருமானம் 6.90 கோடி ரூபாயிலிருந்து 7.25 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
