அரிசி, கேழ்வரகு மூட்டைகள் மாயம் லோக் ஆயுக்தா சோதனையில் கண்டுபிடிப்பு
அரிசி, கேழ்வரகு மூட்டைகள் மாயம் லோக் ஆயுக்தா சோதனையில் கண்டுபிடிப்பு
ADDED : ஜூன் 13, 2026 10:54 PM
பெங்களூரு: ஊழல் புகார் வந்ததால், உணவு கார்ப்பரேஷன் கிடங்குகளில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் . பெருமளவில் அன்னபாக்யா அரிசி, கேழ்வரகு காணாமல் போனதை கண்டுபிடித்தனர்.
பெங்களூரின் பல்வேறு இடங்களில், அன்னபாக்யா அரிசியை முறைகேடாக பயன்படுத்துகின்றனர். பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய அரிசியை, கள்ளச்சந்தையில் விற்கும் சம்பவங்கள், ஆங்காங்கே நடக்கின்றன. உணவு தானியங்கள் வினியோகத்தில், 'கோல்மால்' நடந்துள்ளதாக தொடர்ந்து புகார் வந்தது.
27 இடத்தில் சோதனை இதை தீவிரமாக கருதிய லோக் ஆயுக்தா, நடவடிக்கையில் இறங்கியது. லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட்டீல், உப லோக் ஆயுக்தா நீதிபதிகள் பனீந்திரா மற்றும் வீரப்பா தலைமையில், உணவு தானியங்கள் கார்ப்பரேஷன் கிடங்குககளில், நேற்று அதிரடி சோதனை நடந்தது.
சாந்தி நகர், பசவனகுடி உட்பட, பெங்களூரின் 22, பெங்களூரு ரூரலின் ஐந்து இடங்கள் என, 27 இடங்களில் ஒரே நேரத்தில், சோதனை நடத்தப்பட்டது. இதில் அதிகாரிகளின் குளறுபடி வெளிச்சத்துக்கு வந்தது.
சாந்திநகரின் கிடங்கில், ஆய்வு செய்த போது, அங்கிருந்த ஆவணங்களில் குறிப்பிட்டிருந்த தகவல்களுக்கும், சேமிப்பில் இருந்த தானியங்களுக்கும் பெரும் வித்தியாசம் இருந்தது. 50 கிலோ கொண்ட 1,130 மூட்டைகள் இருப்பதாக, ஆவணங்களில் கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால், கிட்டங்கியில், அவ்வளவு அரிசி மூட்டைகள் இருக்கவில்லை.
இது குறித்து, அதிகாரிகளிடம் விசாரித்த போது, பதில் கூற முடியாமல் திணறினர். கிடங்கில் பணியாற்றும் ஐந்து தொழிலாளர்களுக்கு, ஆயுள் காப்பீடு செய்யப்படவில்லை என்பதையும், லோக் ஆயுக்தாவினர் கண்டுபிடித்தனர்.
அதிகாரி எங்கே? பொம்மனஹள்ளி கிடங்கில், லோக் ஆயுக்தாவினர் சோதனை நடத்திய போது, பொறுப்பு அதிகாரி அச்யுத், அங்கில்லை. தகவல் தெரிவிக்காமல் விடுமுறை எடுத்து உள்ளார்.
கிடங்கில் இருந்த ஊழியர் சிவலிங்கையாவிடம் விசாரித்த போது, அரிசி மூட்டைகள் குறித்து, சரியான தகவல் தரவில்லை. சோதனை நடந்த போது, சட்ட விரோதமாக லாரி ஒன்றில், 25 டன் அரிசி மூட்டைகளை ஏற்றி இருப்பதை, லோக் ஆயுக்தாவினர் கண்டுபிடித்தனர். இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் ஆயுள் காப்பீடு செய்யப்படவில்லை.
பசவனகுடி, ஹனுமந்தநகர் உட்பட மற்ற இடங்களின் கிடங்குகளிலும், இதே சூழ்நிலை காணப்பட்டது. அதிகாரிகள் கூறிய கணக்கை விட, மிகவும் குறைந்த அளவிலான அரிசி மூட்டைகள் இருந்தன. ஆயிரக்கணக்கான அரிசி, கேழ்வரகு மூட்டைகள் காணாமல் போயிருந்தன. இது குறித்து, விளக்கம் அளிக்கும்படி லோக் ஆயுக்தா உத்தரவிட்டு உள்ளது.
