
காடுகோடி: பெங்களூரில் ரவுடியை வெட்டி கொன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு காடுகோடி விஜயலட்சுமி லே - அவுட்டில் வசித்தவர் புனித் என்ற நேபாளி புனித், 28. ரவுடியான இவர் மீது காடுகோடி போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, மிரட்டி பணம் பறிப்பு உட்பட 7 வழக்குகள் இருந்தன. நேற்று முன்தினம் இரவு பைக்கில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார்.
பைக்கை வழிமறித்த நான்கு பேர் கும்பல் புனித்திடம் தகராறு செய்தனர். மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். பலத்த வெட்டு காயம் அடைந்த புனித் பரிதாபமாக இறந்தார்.
காடுகோடி போலீசார் நடத்திய விசாரணையில், புனித்துக்கும், இன்னொரு ரவுடியான ஸ்ரீகாந்த்துக்கும் இடையில் முன்விரோதம் இருந்ததும், ஸ்ரீகாந்த்திடம் உன்னை கொன்று விடுவேன் என்று புனித் மிரட்டி வந்ததும் தெரிந்தது. இதனால் ஸ்ரீகாந்த், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து புனித்தை கொன்று இருக்கலாம் என்று தெரியவந்தது. விசாரணை நடக்கிறது.