ADDED : மார் 24, 2025 05:00 AM
தங்கவயல்: காதலியுடன் சென்று கொண்டிருந்த ரவுடியை, மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோலார் மாவட்டம், தங்கவயல் தாலுகாவின் மாரிகுப்பம் ரிவிட்டர்ஸ் லைனில் வசித்தவர் ரவுடி சிவகுமார் என்ற தேன், 35. இவர் ஆண்டர்சன்பேட்டை போலீஸ் நிலைய ரவுடி பட்டியலில் இருந்தார். இவர் மீது மூன்று கொலை முயற்சி வழக்குகள், தாக்குதல் வழக்குகள் பதிவாகி உள்ளன.
சிவகுமார் நேற்று மதியம், தன் காதலியுடன் காமசமுத்ராவுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். மாரிகுப்பம் அருகில் செல்லும் போது, இரண்டு பைக்குகளில் வந்த நான்கு மர்ம நபர்கள், ரவுடி சிவகுமாரை அரிவாள், இரும்புத்தடி போன்ற ஆயுதங்களால் தாக்கி, கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
தடுக்க வந்த அவரது காதலி மீதும் தாக்குதல் நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். சம்பவம் நடந்த இடத்தை, போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
ஆண்டர்சன் பேட்டை போலீசார் விசாரிக்கின்ற னர். முன் விரோதம் காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என,சந்தேகிக்கப்படுகிறது.