குப்பை பிரிக்காதவர்களிடம் ரூ.1.72 கோடி அபராதம் வசூல்
குப்பை பிரிக்காதவர்களிடம் ரூ.1.72 கோடி அபராதம் வசூல்
ADDED : ஜூன் 02, 2026 01:24 AM
பெங்களூரு: கிரேட்டர் பெங்களூரு ஆணையத்துக்கு உட்பட்ட பகுதியில், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் தரம் பிரிக்காமல் குப்பை போட்டது உட்பட பல காரணங்களுக்கு, 1.72 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு நகரில் துாய்மையை பராமரிக்கவும், திடக்கழிவு மேலாண்மை விதிகளை திறம்பட அமல்படுத்தவும் ஜி.பி.ஏ., எனும் பெங்களூரு பெருநகர ஆணையம், பொது இடங்களில் குப்பை வீசுதல், கழிவுகளை பிரிக்காமல் வைத்தல், அனுமதியின்றி கழிவுகளை அகற்றுதல் உட்பட பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ரூ.1.72 கோடி நடப்பாண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை மூன்று மாதங்கள், நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியான ஆய்வுகள், சிறப்பு நடவடிக்கைகள், பொது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் விதிமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, பெங்களூரு கிழக்கு மாநகராட்சியின் கே.ஆர்.,புரம், பெங்களூரு தெற்கின் பொம்மனஹள்ளி, பெங்களூரு வடக்கின் பேட்ராயனபுரா உட்பட 27 பிரிவில் இருந்து மொத்தம் ஒரு கோடியே 72 லட்சத்து 71 ஆயிரத்து 750 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இதில் மாநகராட்சி மார்ஷல்கள் மட்டும், 1.29 கோடி ரூபாயும், ஜூனியர் சுகாதார இன்ஸ்பெக்டர் 43.71 லட்சம் ரூபாயும் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திடக்கழிவு மேலாண்மை தலைமை நிர்வாக அதிகாரி கரிகவுடா கூறியதாவது:
நகரின் துாய்மையை பராமரிப்பது உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பு மட்டுமல்ல, குடிமக்களின் பங்களிப்பும் இன்றியமையாதது.
பொது இடங்களில் குப்பைகளை போடாமலும், கழிவுகளை தங்கள் வீட்டிலேயே பிரித்தும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளை பின்பற்றியும் குடிமக்கள் நகரத்தின் துாய்மைக்கு உதவ வேண்டும்.
துாய்மையான பெங்களூரை உருவாக்கும் இலக்கை அடைவதற்கு, விதிமீறுவோர் மீது தண்டனை நடவடிக்கை தொடரும். அத்துடன் பொது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அதிகரிக்கப்படும்.
384 வழக்குகள் நகரின் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாடு, திடக்கழிவு மேலாண்மை விதிகளை மீறுவதற்கு எதிராக ஜி.பி.ஏ., நடத்திய சிறப்பு நடவடிக்கையில், மே 28 ம் தேதி, 384 வழக்குகள் பதியப்பட்டு, 3 லட்சத்து 98 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது, தடை செய்யப்பட்ட 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டம் மற்றும் சுகாதார விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிப்பதன் மூலம், பொது மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக மார்ஷல்கள், கூட்டு சுகாதார ஆய்வாளர்கள் தினமும் சோதனை நடத்தி, விதிகள் மீறுவோருக்கு அபராதம் விதித்து வருகின்றனர். மே மாதத்தில் நகரில் சராசரியாக 3 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
