ஆர்.எஸ்.எஸ்.,சை எதுவும் செய்ய முடியாது பிரியங்க் கார்கேவுக்கு சி.டி.ரவி பதிலடி
ஆர்.எஸ்.எஸ்.,சை எதுவும் செய்ய முடியாது பிரியங்க் கார்கேவுக்கு சி.டி.ரவி பதிலடி
ADDED : ஜூன் 10, 2026 03:21 AM

பெங்களூரு: ''அமைச்சர் பிரியங்க் கார்கே தந்தையால் ஆர்.எஸ்.எஸ்., குறித்து எதுவும் செய்ய முடியவில்லை. தேவையின்றி தீ மூட்டினால், அது உங்களையும் சுட்டுவிடும்,'' என பா.ஜ., - எம்.எல்.சி., சி.டி.ரவி தெரிவித்தார்.
'ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு முறைப்படி பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே எச்சரித்திருந்தார்.
இது தொடர்பாக பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று பா.ஜ., - எம்.எல்.சி., சி.டி.ரவி அளித்த பேட்டி:
ஆர்.எஸ்.எஸ்.,சை நசுக்குவேன் என்று கூறிய மல்லிகார்ஜுன கார்கேவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இவை உங்கள் ஆட்சியின் கடைசி நாள். உங்கள் தந்தை மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார். ஆர்.எஸ்.எஸ்., அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல. அதை பதிவு செய்ய வேண்டிய வணிக அமைப்பும் இல்லை.
கர்நாடகாவில் சட்ட விரோதமாக வங்கதேசத்தினர் தங்கி உள்ளனர். அவர்கள், போதை பொருள் புழக்கத்தில் ஈடுபட்டு உள்ளனர். அதை முதலில் கவனியுங்கள். பெண்கள் காணாமல் போகின்றனர்; இங்கு வெடிகுண்டுகளை தயாரிப்பவர்களை கவனியுங்கள்.
ஆர்.எஸ்.எஸ்., ஒரு தேச துரோக அமைப்பு அல்ல. அதனால் எந்த ஆபத்தும் இல்லை. நீங்கள் உள்துறை அமைச்சர்; ரவுடி அல்ல. இப்போது நீங்கள் அடக்குமுறை செய்தால், மேற்குவங்கத்தை போன்று ஆகிவிடும்.
மஹாராஷ்டிரா போலீசார், இங்குள்ள சட்ட விரோத நடவடிக்கைகளை கண்டுபிடிப்பர். அதை பற்றி போலீசாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தீ மூட்டும் வேலையில் இறங்காதீர்கள். அந்த தீ உங்களையே எரித்துவிடும்.
தேவகவுடா மீதான மரியாதை, அதிகாரத்தால் வரவில்லை. அது அவருக்கு இயல்பாகவே வந்தது. மோடி, இயல்பான அன்பு, பாசத்தை காட்டி உள்ளார். காங்கிரசார், அவருக்கு பாடம் புகட்ட தேவையில்லை.
நரசிம்மராவின் இறுதி சடங்கின்போது அவரை பழிவாங்கியவர்கள், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவரது குடும்பத்திற்கு நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. ஆனால், அம்பேத்கரின் கல்லறைக்கு இடம் ஒதுக்கவில்லை. மோடிக்கும், தேவகவுடாவுக்கும் இடையேயான உறவு, தொழில் ரீதியான உறவல்ல. அது சகோதரத்துவம், தந்தை - மகன் போன்ற உறவாகும்.
துறைகளை ஒதுக்குவது முதல்வரின் பொறுப்பு. அது மாநில நிர்வாகத்தை பாதிக்கும். எனவே, இதை விரைவாக தீர்க்க வேண்டும். கடந்த காலத்தை போன்று, ஊழல் நடப்பதை தடுக்க வேண்டும். 60 சதவீதம் கமிஷன் கர்நாடகாவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வரே, எங்கள் ஆட்சியை நீங்கள் 40 சதவீதம் கமிஷன் அரசு என்று சொன்னீர்கள். இப்போது ஒப்பந்தாரர்கள், உங்கள் மீது 60 சதவீதம் கமிஷன் அரசு என்று குற்றம்சாட்டி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
