/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மல்லிகார்ஜுன கார்கேயுடன் சதீஷ் ஜார்கிஹோளி சந்திப்பு
/
மல்லிகார்ஜுன கார்கேயுடன் சதீஷ் ஜார்கிஹோளி சந்திப்பு
மல்லிகார்ஜுன கார்கேயுடன் சதீஷ் ஜார்கிஹோளி சந்திப்பு
மல்லிகார்ஜுன கார்கேயுடன் சதீஷ் ஜார்கிஹோளி சந்திப்பு
ADDED : பிப் 22, 2026 05:25 AM

- நமது நிருபர் -
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை, கர்நாடக பொதுப்பணி அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி நேற்று டில்லியில் சந்தித்து பேசினார். முதல்வர் பதவி விஷயத்தில் நிலவும் குழப்பத்திற்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, வலியுறுத்தினார்.
கர்நாடகாவில் சித்தராமையா, சிவகுமார் இடையே முதல்வர் பதவிக்காக, கடந்த இரண்டரை ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. கடந்த நான்கு மாதங்களாக மோதல் பகிரங்கமாக வெடித்து உள்ளது. கட்சி மேலிடமும் அமைதியாக இருப்பதால், யாருக்கு ஆதரவு அளிப்பது என்று தெரியாமல், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் குழப்பத்தில் உள்ளனர். நேற்று முன்தினம் தனது முகநுால் பக்கத்தில், 'போர் களத்தை விட்டு ஓடிபோகும் கோழை அல்ல நான்' என்று முதல்வர் சித்தராமையா பதிவிட்டது அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேயை, டில்லியில் உள்ள அவரது இல்லத்தில், கர்நாடக பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, முன்னாள் அமைச்சர் ராஜண்ணா, எம்.எல்.ஏ.,க்கள் கோனரெட்டி, பசவந்தப்பா ஆகியோர் நேற்று சந்தித்தனர். கார்கேயுடன் நான்கு பேரும் அரை மணி நேரத்திற்கு மேலாக ஆலோசித்தனர். முதல்வர் பதவி விஷயத்தில் நிலவும் குழப்பத்திற்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின், முதல் முறையாக டில்லி சென்ற ராஜண்ணா, தனக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கும்படி, கார்கேயிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சந்திப்புக்கு பின் சதீஷ் ஜார்கிஹோளி கூறுகையில், ''கர்நாடகாவில் முதல்வர் பதவி விஷயத்தில் நிலவும் குழப்பத்திற்கு, விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும், மேலிடம் எல்லாவற்றையும் முடிவு செய்து விட்டது என்றும், மல்லிகார்ஜுன கார்கே எங்களிடம் கூறினார்,'' என்றார்.
டில்லிக்கு சென்ற நான்கு பேரில், சதீஷ் ஜார்கிஹோளியும், ராஜண்ணாவும் பழங்குடியின சமூகத்தினர்; பசவந்தப்பா எஸ்.சி., சமூகத்தையும், கோனரெட்டி லிங்காயத் சமூகத்தையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் பதவி மீது சதீஷ் ஜார்கிஹோளியும் கண் வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

