ADDED : ஏப் 14, 2025 06:31 AM

பெங்களூரு : பெங்களூரில் குப்பை பிரச்னை, போக்குவரத்து நெருக்கடி, சாலை பள்ளங்கள், மழை நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு போன்றவை, முக்கியமான பிரச்னைகளாகும். இதுவரை பல அரசுகள் மாறியும், இந்த பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியவில்லை.
குறிப்பாக சாலை பள்ளங்கள், மக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. முக்கிய புள்ளிகளின் குடியிருப்புகளை தவிர, பெரும்பாலான சாலைகள் பள்ளங்களாக காணப்படுகின்றன. பள்ளங்கள் இல்லாத சாலைகளை பார்ப்பது அரிது.
இதன் விளைவாக விபத்துகள் நடந்து, வாகன பயணியர் காயமடைகின்றனர். உயிரிழப்பு நடந்த உதாரணங்களும் உள்ளன. சாலை பள்ளங்கள் குறித்து, உயர் நீதிமன்றம் பல முறை எச்சரித்துள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டால், ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால், மாநகராட்சி அதிகாரிகள் சாலை பள்ளங்களை அவசர, அவசரமாக மூடுகின்றனர். அதன்பின் அதை மறந்து விடுகின்றனர்.
இவர்களின் அலட்சியத்தால், மக்கள் அவதிப்படுகின்றனர். பெங்களூரில் ஆங்காங்கே கோடை மழை பெய்கிறது. பருவ மழை துவங்க இன்னும் ஒன்றரை மாதமே உள்ளது. அதற்குள் பள்ளங்களை மூட, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் மழைக்காலத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க முடியாது.
இதற்கிடையே பெங்களூரை அழகாக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மெட்ரோ பில்லர்களை மின் விளக்குகளால் அலங்கரிக்க 50 கோடி ரூபாய், டிராபிக் சிக்னல்களில் செயற்கை நீர் வீழ்ச்சி அமைக்க, பூச்செடிகள் நட 25 கோடி ரூபாய் செலவிட முடிவு செய்துள்ளது. இத்திட்டம் குறித்து பட்ஜெட்டிலும் அறிவித்துள்ளது. தற்போது பணிகளை துவக்க தயாராகின்றனர்.
இதற்கு மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 'முதலில் சாலை பள்ளங்களை மூடி, மக்களின் உயிரை காப்பாற்றுங்கள். அதன்பின் பெங்களூரை அழகாக்கி, உலகத்தரம் வாய்ந்த நகராக்குங்கள். தினமும் வாகனத்தில் பயணிக்கும் போது, உயிரை கையில் பிடித்தபடி செல்ல வேண்டியுள்ளது. இந்த பிரச்னையை சரி செய்யுங்கள்' என, சமூக வலைதளங்களில் அறிவுறுத்தி உள்ளனர்.