பெங்., வடக்கு மாநகராட்சியில் தெரு நாய்களுக்கு 'ஷெல்டர்' திறப்பு
பெங்., வடக்கு மாநகராட்சியில் தெரு நாய்களுக்கு 'ஷெல்டர்' திறப்பு
ADDED : ஆக 25, 2026 01:09 AM

பெங்களூரு: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பெங்களூரு வடக்கு மாநகராட்சியில் தெரு நாய்களை தங்க வைக்க, 'ஷெல்டர்' கட்டப்பட்டுள்ளது. இது நாய்களுக்கான முதல் ஷெல்டராகும்.
பெங்களூரில் தெரு நாய்களின் தொந்தரவு அதிகரித்துள்ளது. சாலையில் செல்லும் சிறார்களை கடித்து காயப்படுத்துகின்றன. வாகன பயணியரை விரட்டுவதால், விபத்து நேரிடுகிறது. நாய் கடித்து உயிரிழந்தோர் ஏராளம். தெரு நாய்களை கட்டுப்படுத்தும்படி, மாநகராட்சியினரை பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.
தெரு நாய்களை பிடித்தால் பிராணி நலன் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்கின்றனர். இதனால், அதிகாரிகள் இயலாமையில் உள்ளனர். இதற்கிடையே உச்ச நீதிமன்றம் தெரு நாய்களை ஒரே இடத்தில் அடைக்க, வசதி செய்யும்படி உத்தரவிட்டது. இதன்படி பெங்களூரில், 'நாய் ஷெல்டர்' அமைக்கப்பட்டது.
பெங்களூரு வடக்கு மாநகராட்சியின் மேதி அக்ரஹாராவில், 2 கோடி ரூபாய் செலவில், புதிதாக நாய் ஷெல்டர் திறக்கப்பட்டுள்ளது. நாய்களுக்கு தனியாக ஷெல்டர் அமைக்கப்பட்டது, இந்தியாவில் இதுவே முதன் முறையாகும்.
ஷெல்டரில், 500 நாய்களுக்கு, அடைக்கலம் தரலாம். தற்போது பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு தொந்தரவு கொடுத்த 40 நாய்களை பிடித்து வந்து இந்த ஷெல்டரில் அடைத்துள்ளனர்.
தினமும் இரண்டு வேளை உணவு வழங்கப்படுகிறது. வரும் நாட்களில் மேலும் பல இடங்களில், நாய் ஷெல்டர் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அதிகாரிகளின் நடவடிக்கையால், பெங்களூரில் தெரு நாய்களின் தொல்லை, முடிவுக்கு வருமா என்பதை, பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
