/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை
/
அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை
ADDED : பிப் 05, 2026 06:32 AM
பெங்களூரு: அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், ஏழை நோயாளிகள் பாதிப்படைந்துள்ளனர்.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகள், தங்களின் மருத்துவ சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ளனர். இத்தகைய மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகளிடம் சீட்டு எழுதி கொடுத்து, வெளியே வாங்கி வரும்படி அனுப்புவதாக, தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் கூறியதாவது:
அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. கடுமையான நோய்கள் தொடர்பான மருந்துகள் இல்லை. இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு எங்களால், சிகிச்சை அளிக்க முடியாமல் திண்டாடுகிறோம்.
அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை உள்ளது குறித்து நாங்கள், பல முறை சுகாதாரத்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். ஆனால் அவர் இந்த விஷயத்தை தீவிரமாக கருதவில்லை.
சிகிச்சைக்கு அத்தியாவசிய தேவையான ஐ.வி., திரவம், ஆன்டிபயாடிக் உட்பட பல்வேறு மருந்துகள் வினியோகிக்கப்படவில்லை. மருந்துகள் வாங்குவது குறித்து பலமுறை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
ஆனாலும் மருந்துகள் வழங்கப்படவில்லை. அரசு வழங்கும் நிதியுதவியில், மருந்துகள் வாங்கும்படி கூறுகின்றனர். ஆனால் பல மருத்துவமனைகளுக்கு, இன்னும் நிதியுதவி அளிக்கப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

