ரவுடியை கட்டுப்படுத்த தவறிய எஸ்.ஐ., சஸ்பெண்ட்: எஸ்.பி.,
ரவுடியை கட்டுப்படுத்த தவறிய எஸ்.ஐ., சஸ்பெண்ட்: எஸ்.பி.,
ADDED : ஜூன் 18, 2026 10:28 PM
உத்தர கன்னடா: முன்னாள் ரவுடி ஒருவர், போலீசாரின் சட்டைக்காலரை பிடித்து இழுத்து, தகாத வார்த்தைகளால் பேசியதை தடுக்காமல், ஜீப்பில் அமர்ந்து வேடிக்கை பார்த்த எஸ்.ஐ., சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
உத்தர கன்னட மாவட்டம், ஹளியாளாநகரில், மவுர்யா பார் அண்ட் ரெஸ்டாரென்ட் அருகில், ஜூன் 14ம் தேதியன்று முன்னாள் ரவுடி மச்சு மஞ்சா என்பவர் குடிபோதையில், நடுரோட்டில் தகராறு செய்தார். பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தார். இது குறித்து தகவலறிந்த ஹளியாலா போலீசார், அங்கு சென்றனர்.
போலீசாரை கண்டு கோபமடைந்த மஞ்சா, ஏட்டு ஒருவரை சட்டைக்காலரை பிடித்து இழுத்து தாக்கினார். போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதை கண்டு மற்ற போலீசார், நின்றிருந்தனர்.
இதை தடுக்க வேண்டிய எஸ்.ஐ., பசவராஜ் மபநுாரா என்பவர், மவுனமாக அமர்ந்திருந்தார். ஜீப்பில் இருந்து இறங்கவே இல்லை. அந்த ரவுடியை கட்டுப்படுத்தவும் முயற்சிக்கவில்லை.
அது மட்டுமின்றி, போலீசார் மீது தாக்குதல் நடந்தும், மதுபான பாரில் நடந்த தகராறு என, வழக்கு பதிவு செய்தார். இதுதொடர்பான வீடியோ, சமூக வலை தளத்தில் பரவிய பிறகே, இது வெளிச்சத்துக்கு வந்தது.
இதை கவனித்த உத்தர கன்னடா எஸ்.பி., தீபன், சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி, டெபுடி எஸ்.பி.,க்கு உத்தரவிட்டார். அவரும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார்.
அதன் படி, எஸ்.ஐ., பசவராஜ் மபநுாராவை சஸ்பெண்ட் செய்து, எஸ்.பி., தீபன் நேற்று முன் தினம் உத்தரவிட்டார். சம்பவ இடத்தில் இருந்த ஒரு ஏ.எஸ்.ஐ., மற்றும் ஏழு ஏட்டுகளை வேறு இடத்துக்கு, இடம் மாற்றி உத்தரவிட்டார்.
